நேத்ரனை 22 வருஷமா தெரியும்.. 2 மகள்கள் பாவம்! 6 மாசமா பட்ட வேதனை.. சீரியல் நடிகர் சதீஷ் எமோஷனல்
சென்னை: சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் கடந்த ஆறு மாத காலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமாகி இருக்கிறார். நேத்ரன் குறித்து பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் சதீஷ் உருக்கமாக பேசியிருக்கிறார்.
சீரியல் நடிகர் நேத்ரன் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி, முத்தழகு, பொன்னி உட்பட பல சீரியல்களில் நடித்திருக்கிறார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. அதற்கு பிறகு தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று காலமாகி இருக்கிறார்.

நேத்ரன் சீரியல் நடிகை தீபாவை காதலித்து திருமணம் செய்திருந்தார். நேத்ரன்- தீபா தம்பதிக்கு அபிநயா, அஞ்சனா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் அபிநயா நேத்ரனுடன் விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வெற்றி பெற்றார். அதுபோல கனா காணும் காலங்கள் சீசன் 2 வெப் சீரிஸிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
தொடர்ச்சியாக சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதுபோல நேத்ரனின் இரண்டாவது மகளும் சினிமாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேத்ரன் இறப்பு குறித்து அவருடைய நெருங்கிய நண்பர்கள் பலரும் வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள். அதில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சதீஷும் தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அதில், நேற்று இரவு சக நடிகர்.. என் அன்பு சகோதரன் நேத்ரன் காலமாகி இருக்கிறார். ஆறு மாசமா ரொம்ப கஷ்டப்பட்டு இறந்திருக்கிறார். நேத்ரனை எனக்கு பயணம் என்ற சீரியல் பண்ணும் போது இருந்து தெரியும். கடந்த 22 வருடமா எனக்கு அவரை தெரியும். இத்தனை வருஷத்தில் நேத்ரன் தம்பி ஒருமுறை கூட கோபப்பட்டு முகம் சுளிச்சு நான் பார்த்தது கிடையாது.
ஆனால் அவர் என்னை அந்த மாதிரி நிறைய முறை பார்த்திருப்பார். அவர் ரொம்ப மென்மையானவர். ரொம்ப பக்குவமா கனிவா பேசுற ஆத்மா. நல்லவங்களை ஏன் ஆண்டவன் இவ்வளவு சோதிச்சு உயிரை எடுத்துக்கிறார்ன்னு தெரியல. அவன் போடுற கணக்கு அவனுக்கு மட்டும்தான் தெரியும்.
நேத்ரனுடைய ஆன்மா சாந்தி அடைய நான் வேண்டுகிறேன். நம்ம எல்லாரும் வேண்டிக்குவோம்... நேத்ரனுக்கு மனைவியும் ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்க. அவங்களுக்கு இதை தாங்கிக்கிற சக்தி கிடைக்கணும். நல்லதையே நினைக்கணும், அவங்களுக்கு நல்லதே நடக்கணும். நீண்ட நாட்கள் ஆரோக்கியமா அவங்க வாழனும்.. என்று நாம எல்லாரும் வேண்டிக்கலாம் என்று சதீஷ் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications