சிறகடிக்க ஆசை அடுத்த வாரம்: பாட்டி கேட்ட சத்தியம்.. ரோகிணியின் குழந்தை உண்மை உடைபடுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்ற ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் ரோகிணியை மீண்டும் வீட்டுக்குள் சேர்க்க வேண்டும் என்றால் இந்த சத்தியத்தை செய்ய வேண்டும் என்று பாட்டி சொல்கிறார். அதே நேரத்தில் ரோகிணியிடம் அண்ணாமலை சில கேள்விகளை கேட்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது குடும்பத்திடம் மாட்டுவார்? அவர் பற்றிய உண்மைகள் எதுவுமே குடும்பத்திற்கு தெரியவில்லையே? என்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்களுக்கு இருந்த நிலையில் கடந்த வாரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய தொடங்கி இருக்கிறது. அதுவும் ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு கிடையாது, அவருடைய மாமாவாக நடிக்க வந்த நபர் எல்லாம் பொய் என்ற உண்மைகள் மட்டும்தான் தெரிய வந்திருக்கிறது.

உடைபட்ட உண்மைகள்
ஆனால் பிரவுன் மணி பற்றிய உண்மைகள் தெரிய வந்த போது ரோகிணி என்ன சொல்ல போகிறார் என்று கேட்காமலேயே விஜயா ரோகிணியை அடித்து வீட்டை விட்டு துரத்திவிட்டார். இதனால் மனோஜ் குடித்துவிட்டு ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார். வழக்கம் போல மனோஜ் மீது பாசத்தை கொட்டும் அண்ணாமலை தன்னுடைய மகனுக்காக ரோகிணியை மீண்டும் வீட்டிற்கு கூட்டிட்டு வரவேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
வில்லன் அண்ணாமலை தானா
"என்னதான் இருந்தாலும் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு" என்று உடைந்த ரெகார்ட் போல அண்ணாமலை சொல்லிக் கொண்டே இருக்க, இந்த சீரியலில் நிஜ வில்லனே நீங்கதான் ஐயா என்று ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். ரோகிணி பற்றிய உண்மைகள் தெரிய வரும்போது கூட்டத்தில் குடும்பத்தினரின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்போடு இருந்த ரசிகர்களுக்கு விஜயா ரோகிணியை நாலு அப்பு விட்டது மட்டும்தான் ஆறுதல் பரிசு. மத்தபடி எதுவும் பெருசாக நடக்கவில்லை.

திருந்தாத முத்து மீனா
எவ்வளவு பட்டாலும் முத்து மற்றும் மீனா ரோகிணிக்கு வழக்கம் போல சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். மாமாவும், அத்தையும் பாவம், குடும்பம் உடைந்துவிடும் என்று இவர்கள் போடும் செண்டிமெண்ட் டயலாக் பார்க்கும் ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது. இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கு என்று வெளியான ப்ரோமோவில் அண்ணாமலை மற்றும் முத்து ஆசைப்பட்டது போலவே பாட்டியை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

சத்தியம் கேட்கும் பாட்டி
விஜயாவும் ரோகிணியும் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். அப்போது பாட்டி மீனா கையில் இருக்கும் தீபாதாரணை தட்டில் ரோகிணியை சத்தியம் செய்ய சொல்கிறார். இனி இந்த குடும்பத்திற்கு உண்மையாக இருப்பேன் எந்த விஷயத்தையும் குடும்பத்திடம் ஏமாற்றாமல் முழு மருமகளாக நடந்து கொள்வேன் என்று சொல்ல சொல்கிறார்கள். அப்போது ரோகிணி யோசித்து கொண்டு இருக்கிறார்.

தரமான சம்பவம் இருக்கு
அதை பார்த்ததும் அண்ணாமலை நீ இந்த ஒரு விஷயத்தை தான் மறைச்சிருக்கியா? இல்ல இன்னும் எங்ககிட்ட சொல்லாத விஷயங்கள் எதுவும் உன்கிட்ட இருக்கா என்று கேட்க ரோகிணி திரு திருவென முழித்துக் கொண்டிருக்கிறார். இதனால் திருமணம் முடிந்து ஒரு குழந்தை இருக்கும் விஷயத்தை இப்போதே சொல்லப் போகிறாரா? அல்லது வழக்கம்போல அதையும் மறைத்து விடுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. எப்படியும் இந்த உண்மைகள் இப்போதைக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் அடுத்த வாரம் என்ன சம்பவம் நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications