Snehan: பாடலாசிரியர் சினேகனின் வாழ்வில் மீண்டும் ஒரு துயரம்! தந்தை காலமானார்! பிரபலங்கள் இரங்கல்!
சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணிப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் வாழ்வில் மீண்டும் ஒரு சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது. அவருடைய தந்தை இன்று (அக்டோபர் 27ஆம் தேதி) அதிகாலை 4:30 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தி திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கவிஞர் சினேகன்: பயோகிராபி
கவிஞர் சினேகன், தனது அழுத்தமான மற்றும் கவிதை நயமிக்கப் பாடல்களால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர். ஆரம்பகாலத்தில் கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் காட்டிய இவர், பின்னர் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானார். அவர் எழுதிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்களின் ப்ளே லிஸ்ட்டில் தவறாமல் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, இவரது பாடல்கள் உணர்வுப்பூர்வமான வரிகள், வாழ்வியல் தத்துவங்கள் மற்றும் காதல் எனப் பல பரிமாணங்களில் அமைந்திருக்கும். 90ஸ் ரசிகர்களில் அதிகமாக ரசிக்கும் பாடல்களில் சினேகன் பாடல்கள் இடம் பிடித்திருக்கும். ஆனால் அந்த பாடல்களுக்கு சினேகன் தான் பாடல் ஆசிரியர் என்பது பலருக்கு தெரியாது.
சினேகன் பாடலாசிரியராக மட்டுமின்றி, அரசியலிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். கமல்ஹாசனின் அரசியல் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தொலைக்காட்சித் துறையிலும் கால் பதித்த இவர், பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
சொந்த ஊரில் இறுதிச் சடங்கு
சினேகனின் தந்தை காலமான செய்தி அவரது சொந்த கிராமத்தைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தந்தையாரின் இறுதிச் சடங்கு, நாளை (அக்டோபர் 28) காலை 11 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள, கவிஞரின் சொந்தக் கிராமமான புதுக்கரியப்பட்டியில் நல்லடக்கம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சாவூருக்கும், திருச்சிக்கும் இடையில் செங்கிப்பட்டி அருகில் இவர்களின் ஊர் அமைந்துள்ளது.
மனைவி கன்னிகாவுடனான திருமண பயணம்
சினேகனின் தனிப்பட்ட வாழ்க்கையும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை கன்னிகாவை சினேகன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். கன்னிகா தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சில படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர்.
திருமணம்
இருவருக்கும் இடையேயான நீண்ட நாள் காதல், சில வருடங்களுக்கு முன் திருமணத்தில் முடிந்தது. இவர்களது திருமணம் பல பிரபலங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணப் பயணம் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது தந்தையின் மறைவு சினேகனை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே, சினேகன் தனது தாயை இழந்த துயரில் இருந்து மீண்டு வந்த நிலையில், தற்போது தந்தையின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கவிஞர் சினேகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் திரையுலகப் பிரபலங்களும், அரசியல் நண்பர்களும், ரசிகர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications