எப்போ கொல்லப்படுவோம்னே தெரியல.. தலித் என்பதால் வாழ்வில் எதையும் கொண்டாட முடியல: பாடகர் அறிவு குமுறல்
சென்னை: பாடகர் அறிவு, ஆம்ஸ்ட்ராங் மரணம் குறித்து தன்னுடைய ஆதங்கத்தை "வள்ளியமா பேராண்டி" என்ற ஆல்பம் வெளியீட்டு விழாவில் வெளிப்படுத்தி இருக்கிறார். தினம் தினம் ஒருவர் செத்து கொண்டு இருக்கிறோம். அடுத்து கொல்லப்படுவது நானாக கூட இருக்கலாம் என்று அவர் பேசி இருப்பது இணையத்தில் பல்வேறு கருத்துக்களை பெற்று வருகிறது.
பாடகர் அறிவின் "வள்ளியம்மா பேராண்டி" என்ற ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பா.ரஞ்சித் அறிவு எழுதிய அனைத்து பாடல்களும் சுவாரசியமாகவே இருக்கும். அவருக்குள் அரசியல் தன்மை இருக்கிறது.

அவரிடம் இருந்து அம்பேத்கரிய பார்வை தான் எனக்கு அவருடனான நெருக்கத்தை கூட்டியது. நான் திரைப்படங்கள் எடுக்க தொடங்கும் போது என்னுடைய கதை அதிகமான மக்களிடம் தொடர்பு ஏற்படுத்துமா என்று சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் அறிவு பாடும் பாடல்களில் இருக்கும் அரசியல் தன்மை மக்களிடம் சென்று சேர ஆரம்பித்துள்ளது.
அதிகமான மக்களிடம் பிரபலமான மீடியா வழியில் அரசியலை கொண்டு சேர்ப்பது தான் தொடர்பு ஏற்படுத்தும். தலித் சுப்பையா போன்றோர் மேடை ஏறி பல பாடல்களை பாடி உள்ளனர். ஆனால் அது மக்களிடம் சென்று சேரவில்லை அதிகமான மக்களை தொடர்பு கொள்ள முடிந்ததால் தான் அந்த பாடல்கள் பரவலாக்கப்படும்.
அறிவு எழுதிய எஞ்சாமி பாடல் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் சந்தோஷ் நாராயணனின் தயாரிப்பும், தீ யின் குரலும் அறிவின் எழுத்தும் தான். ஆனால் அந்தப் பாடலுக்கு பிறகு அறிவுக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. அதனால் அறிவு மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார். அதிலிருந்து வெளியே வருவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டார்.
அதன் வெளிப்பாடுதான் இந்த 12 பாடல்கள் என்று பா ரஞ்சித் பேசி இருக்கிறார். அவரைத் தொடர்ந்து அறிவு பேசுகையில் எங்கள் ஊர் திருவிழாவில் மக்கள் இசை கலைஞர்கள் பாடுவார்கள் அதை பார்த்தும் கேட்டும் வளர்ந்தவன் நான். தனி இசை கலைஞராக இருப்பதற்கு முக்கிய காரணம் காஸ்லெஸ் கலெக்டிவ். அதற்காக பா.ரஞ்சித்துக்கு நன்றி. விளிம்பு நிலை மக்கள் கோர்ட்டு போட்டு மேடையில் நிற்கலாம் என்று உறுதியை கொடுத்தது காஸ்லெஸ் கலெக்டிவ்.
எங்க தாத்தா காலில் செருப்பு போட்டு நடக்க முடியாது ஆனால் இன்று நாங்கள் விமானத்தில் ஏறி பறக்கிறோம் நாங்கள் இப்போ ஃபாரின் போறோம் என்றால் இது சாதாரண மாற்றம் கிடையாது என்று நினைக்கிறேன் அம்பேத்கரில் தொடங்கி எங்கள் அண்ணன் இயக்குனர் ரஞ்சித் வரைக்கும் அவர்களுடைய உழைப்பு எங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கிறது

நான் இன்று என்னுடைய பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. நாம் எப்போது கொல்லப்படுவோம் என்று தெரியாத வன்முறையான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு தலித்தாக இருந்து வாழ்க்கையில் எந்த கொண்டாட்டத்தையும் கொண்டாட முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம்.
சாதிய சமூகம் ஒருவித இறுக்கமான மனநிலையை வைத்துள்ளது. ஆம்ஸ்ட்ராங் அண்ணனின் மறைவை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இப்படி ஒவ்வொருவராக நாம் இழந்து கொண்டிருக்கும் போது நம்முடைய சந்தோஷத்தை எப்படி கொண்டாடுவது என்று எனக்குத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications