ரஜினி பற்றி பரவிய சர்ச்சை.. இதுதாங்க நடந்தது.. நானே நொந்து போயிட்டேன்.. வடிவேலு விளக்கம்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு, தன்னைக் குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தவறான தகவல்கள் குறித்து மனவருத்தத்துடன் பேசியிருக்கும் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வேகமாக வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக சினிமாவில் தனக்கென ஒரு தனி பாணி உருவாக்கிய வடிவேலு, இப்போது பொய்யான தகவல்களின் இலக்காகி இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு பேட்டி
சமீபத்தில் நடிகரும் இயக்குநருமான சுந்தர் சியுடன் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் வடிவேலு பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அப்போது, சமூக வலைதளங்களில் தன்னை பற்றிய பல தவறான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாக ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் வடிவேலு நடிக்க முடியவில்லை என்பதற்காக, ரஜினிகாந்த் அவரை கடுமையாக விமர்சித்தார், இனிமேல் எந்த படத்திலும் வடிவேல் நடிக்க விடக்கூடாது என்று கூறினார், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்ற வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதாக கூறப்படுகிறது. அந்த வீடியோவை தானும் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக வடிவேலு தெரிவித்துள்ளார்.
வதந்தி
"என்னடா... இப்படி நடக்காத விஷயங்களையே நடந்தது மாதிரி பேசுறாங்கன்னு பார்த்து நானே அதிர்ச்சி அடைந்தேன். இப்போ என்ன உண்மை, என்ன பொய் என்பதே தெரியாத நிலை. எல்லாம் கட்டுக்கதை" என்று அவர் வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.
அதே நேரத்தில், பழைய திரைப்பட பாடல் வரிகளை நினைவுபடுத்தும் வகையில் "எல்லாம் கட்டுக்கதை" என்ற கருத்தையும் சிரிப்புடன் பேசி இருக்கிறார். நகைச்சுவை நடிகராக இருந்தாலும், இந்த விவகாரத்தில் வடிவேலுவின் மனக்கசப்பு வெளிப்படையாக தெரிகிறது.
வடிவேலுவைப் பொறுத்தவரை, அவர் வெறும் காமெடி நடிகர் மட்டும் அல்ல; ஒரு தலைமுறையின் மீம் கலாச்சாரத்தையே கட்டியெழுப்பிய மனிதர். அவருடைய வசனங்கள் இன்றும் சமூக வலைதளங்களில் தினசரி பயன்பாட்டில் இருக்கின்றன. வின்னர், சந்திரமுகி, பிரண்ட்ஸ், மருதமலை, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்களில் அவர் செய்த கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மனதில் அழியாத இடம் பிடித்துள்ளன.
கம் பேக்
ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்த வடிவேலு, பின்னர் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். ஆனால் அதே நேரத்தில், அவரை பற்றிய வதந்திகளும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவி வருவது அவருக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது.
சமூக வலைதளங்கள் தகவல்களை வேகமாக பரப்பும் சக்தி கொண்டவை. ஆனால் அதே வேகத்தில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் பரவும்போது, அது சம்பந்தப்பட்டவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். தற்போது வடிவேலு வெளியிட்ட இந்த ஆதங்கமான கருத்து, "ஒரு பிரபலத்தின் பெயரில் எதையும் பேசலாமா?" என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
வடிவேலுவின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். "வடிவேலு சார் பற்றி பொய்யான விஷயங்களை பரப்பாதீங்க", "அவர் சிரிக்க வைத்தவர்; காயப்படுத்தாதீங்க", "சோசியல் மீடியாவில் எல்லாம் வரும் தகவல்களையும் நம்பக்கூடாது" என்று கருத்துகள் பதிவாகி வருகின்றன.














Click it and Unblock the Notifications