Actor Rajesh: 40 வயதிலேயே தனக்கு கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?
சென்னை: நடிகர் ராஜேஷ் தன்னுடைய 75வது வயதில் இன்று காலை உடல்நிலை குறைபாட்டால் காலமானார். சினிமாவில் நான்கு தலைமுறைகளை பார்த்த இவர் தன்னுடைய 40 வயதிலேயே தனக்கு கல்லறை கட்டி இருக்கிறார். அதற்கு அவர் சொன்ன காரணம் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. ராஜேஷ் பேசிய பழைய பேட்டிகள் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சினிமாவில் மட்டுமல்லாமல் சீரியகளிலும் நடித்த பிரபலமடைந்த நடிகர் ராஜேஷ் ஹீரோவாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். திருவாரூர் மன்னார்குடியில் பிறந்த ராஜேஷின் தமிழ் உச்சரிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கும். திரை உலகில் 45 ஆண்டுகளாக பணியாற்றிய ராஜேஷ் நடிகர் எஸ் எஸ் ஆருக்கு பிறகு தமிழை சுத்தமாக உச்சரித்தவர்.

நடிகர் ராஜேஷ் மரணம்
ஏழு ஆண்டுகளாக ஆசிரியராக இருந்ததால் தமிழ் மீது தனக்கு தனி ஆர்வம் இருப்பதாக பல இடங்களில் பேசியிருக்கிறார். ராஜேஷின் இறப்பிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வருத்தங்கள் தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் ராஜேஷ் சில வருடங்களுக்கு முன்பு பேசிய பேட்டிகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய நாற்பதாவது வயதிலேயே தான் தனக்கு கல்லறை கட்டிக் வைத்திருப்பதாக ராஜேஷ் கூறி இருக்கிறார். அதற்கான காரணத்தை அவர் சொன்னது வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நடிகர் ராஜேஷ் பழைய பேட்டி
அந்த வீடியோவில் ராஜேஷ் பேசுகையில், ஒரு முறை லண்டனுக்கு சென்று இருந்தேன். அப்போது காரல் மார்க்ஸ் கல்லறையை பார்த்தேன். அந்த கல்லறை எனக்கு பிடித்து விட்டது. அந்த கல்லறையில் நின்று நான் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன். அதற்கு அடுத்த வருடமே எனக்கு நானே ஒரு கல்லறைக் கட்டிக் கொண்டேன். காரல் மார்க்ஸ் கல்லறையில் அவர்களுடைய குடும்பத்தினருக்கு அடுத்தடுத்து அடக்கம் செய்யும் வகையில் அறைகள் இருக்கும்.
தனக்கு கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்
ஒருவருடைய உடல் கீழே போனதும் அடுத்தவருடைய உடல் மேலே வைப்பது போன்று இருக்கும். அதேபோல நானும் மார்பல் வைத்து ஒரு கல்லறை கட்டி வைத்திருந்தேன். நான் கல்லறை கட்டி சில மாதங்களில் என்னுடைய அம்மா இறந்துவிட்டார். அதற்குப் பிறகு என்னுடைய அப்பா, அடுத்ததாக என்னுடைய மனைவி என்று அடுத்தடுத்து சில வருடங்களில் எல்லோரும் இறந்து விட்டார்கள். அவர்களை எல்லோரையும் அந்த கல்லறையில் தான் அடக்கம் செய்திருக்கிறேன்.
40 வயதில் கல்லறை
இப்போது எனக்காக ஒரு இடம் அந்த கல்லறையில் இருக்கிறது. நான் 40 வயதிலேயே எனக்கு கல்லறை கட்டி விட்டேன். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள் தனக்கு தானே கல்லறை கட்டிக் கொண்டவன் 100 வயது வரை இருப்பான் என்று, நான் நூறு வயது வரை இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு கட்டவில்லை. ஆனால் என்னுடைய கல்லறை எப்படி இருக்க வேண்டும் என்று நான் இறந்த பிறகு பார்க்க முடியாது அதனால் இதுதான் என்னுடைய கல்லறை என்று நானே பார்த்துக் கொள்ளும் வகையில் தான் அந்த கல்லறையை கட்டி இருந்தேன்.
கல்லறையில் வசனம்
முதலில் கட்டிய மார்பல் கல்லறை இடிந்து விட்டது. அதற்குப் பிறகு அதை நான் புதுப்பித்து கட்டி இருக்கிறேன். என்னுடைய இறப்பிற்கு பிறகு என்னுடைய மகனோ அல்லது மகளோ அப்பாவுக்கு எப்படி கல்லறை கட்ட வேண்டும் என்று அந்த நேரத்தில் தவித்து நிற்கக்கூடாது, அதற்காக எனக்கு நானே கல்லறை கட்டிக் கொண்டேன். யாரும் இப்படி எல்லாம் கல்லறை கட்டி வைத்திருப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் என்னுடைய கல்லறையை எனக்கு பிடித்த மாதிரி இப்போது கட்டி இருக்கிறேன் என்பதே எனக்கு ஒரு திருப்தி தான். எனக்கு பிடித்த வசனத்தை கூட அந்த கல்லறையில் நான் எழுதி வைத்திருக்கிறேன், என்று அந்த பேட்டியில் ராஜேஷ் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications