வேலூரில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி.. உடனே ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்ட ஜூலி! கடைசியில் கேட்ட கேள்வி!
சென்னை: தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது நடிகர் விஜய் சொன்ன ஜல்லிக்கட்டு "குட்டி ஸ்டோரி". விஜய் என்று வேலூரில் சொன்ன குட்டி ஸ்டோரிக்கு பதிலடியாக பிக் பாஸ் ஜூலி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் இதை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வேலூரில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு காளையை வைத்து விஜய் சொன்ன கதையை நேரடியாக குறிப்பிட்ட அவர், "வேலூரில் ஜல்லிக்கட்டு காளை பற்றி குட்டி கதை சொன்னீர்கள் அண்ணா... சாலை ஓரம் ஒரு காளை நின்றது... அதற்கு ஒரு குழந்தை புல்லுக் கட்டு கொடுத்து ஓரமாக விட்டது என்று சொன்னீங்க. ஆனால் உங்க கட்சியில் இருக்கிற பாதி பேர் சின்னவங்க. நீங்க சொல்றதை வேதவாக்கு என்று நம்பி, உண்மையிலேயே ஜல்லிக்கட்டு காளை முன்னாடி புல்லுக் கட்டு கொண்டு போய் நீட்டுனா என்ன ஆகும்? அப்படி ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு ஏற்கப் போறீங்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதோடு நிற்காமல், "இன்னொரு ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்த நீங்க யாருக்கும் தெம்பு இல்ல. உங்களால போன உயிர் 50- 50ஆக இருக்கட்டும்... அதை 500 ஆகிடாதீங்க அண்ணா" என்று அட்வைஸ் கொடுக்கும் விதத்தில் அவர் பேசியது கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது. விஜயின் கூட்டத்தின் போது உயிரிழந்த இளைஞர்களை நினைவுபடுத்தும் வகையில் அவர் இந்த வரிகளை கூறியதாக விஜய் ரசிகர்கள் ஜூலியை திட்டி வருகின்றனர்.
இந்த பரபரப்புக்கு காரணமானது விஜய் வேலூரில் பேசிய அந்த குட்டி ஸ்டோரி தான். விஜய் தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பே ஒரு உவமைக் கதையை கூறினார். ஒரு ஊரில் மிகப் பரபரப்பாக மக்கள் நடமாட்டம் இருக்கும் சாலையில் ஒரு ஜல்லிக்கட்டு முரட்டுக் காளை சீறிக் கொண்டு நின்றது. மக்கள் அதை அடக்க முடியாமல் வேடிக்கை பார்த்தனர்.
வழக்கமாக அந்த காளையை அடக்கும் அனுபவசாலிகள் அன்றைய தினம் அந்த ஊரில் இல்லை. அவர்களுடன் இருப்பவர்கள் தான் அனுபவசாலிகள் என்று சொல்லிக் கொண்டு காளையை அடக்க முயன்றார்கள். ஆனால் காளை அவர்களை இடித்துத் தள்ளியது.
அந்த நேரத்தில் ஒரு சின்ன பையன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு காளையை நோக்கி சென்றான். ஏற்கனவே காளையிடம் முட்டு வாங்கி கிடந்தவர்கள், "நாங்களே அனுபவசாலிகள்... எங்களாலே முடியல... நீ போய் செத்துப் போயிடாதே" என்று அவனை எச்சரித்தனர். ஆனாலும் அந்த பையன் காளைக்கு அருகே சென்று, தனது பாக்கெட்டில் இருந்த இரண்டு புல்லுக் கட்டுகளை எடுத்துக் காட்டினான். உடனே காளை பசியில் புல்லை சாப்பிடத் தொடங்கியது. அதை மெதுவாக தடவி வயல்வெளிக்குக் கொண்டு போய்விட்டான்.
அதை பார்த்த அனுபவசாலிகள் தலைகுனிந்து நின்றனர். அப்போது ஒரு பெரியவர் அந்த பையனை பார்த்து "எப்படி காளையை அடக்கியாய்?" என்று கேட்டார். அதற்கு அந்த பையன், "அது கோபத்தில் இல்லை... பசியில் இருந்தது போலத் தெரிந்தது... அதனால்தான் புல் கொடுத்தேன்" என்று சொன்னான்.
இந்தக் கதையின் அரசியல் பொருளை விஜய் நேரடியாக விளக்கினார். அந்த காளை தான் தமிழ்நாடு அரசியல் களம்... மக்கள் தான் அந்த பெரியவர்... அந்த சிறுவன் தான் தமிழக வெற்றிக் கழகம் என்று கூறியதும் கூட்டத்தில் கைதட்டல் முழங்கியது.
அனுபவம், வயது, பெரியவர் - சின்னவர் என்பதெல்லாம் முக்கியமில்லை. ஒரு பிரச்சினையை யார் எப்படி அணுகி தீர்வு காண்கிறார்கள் என்பதுதான் முக்கியம் என்ற மெசேஜை அவர் இந்த கதையின் மூலம் சொல்ல முயன்றார்.
ஆனால் இந்த உவமைதான் இப்போது பெரிய அரசியல் விவாதமாக மாறியுள்ளது. ஜூலி வெளியிட்ட வீடியோ அந்த கதையை நேரடியாக தரையில் இறக்கி கேள்வி எழுப்பியதால், "உவமை அரசியல் vs தரைநிலை நிஜம்" என்ற கோணத்தில் சமூக வலைதளங்களில் கடும் விவாதம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications