விஜய் இடத்தை பிடிக்க போட்டியா? வெளிப்படையாக சிவகார்த்திகேயன் கொடுத்த விளக்கம்! தொடங்கிய பஞ்சாயத்து
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் விஷயங்களில் ஒன்று, நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு மோத இருப்பதுதான். இந்த சூழலில், சிவகார்த்திகேயன் முன்னதாக விஜய்யை பற்றி பேசிய கருத்துகள் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி, புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளன.
முன்னதாக மதராஸி படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், "விஜய்யின் பயணத்தை நான் நகலெடுக்க முடியாது. அவருடைய இடத்தைப் பிடிக்க வருகிறேன் என்பதெல்லாம் தவறான புரிதல். எனக்கென ஒரு பாதை இருக்கிறது" என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

அதுபோல என்னைக்குமே அண்ணன் அண்ணன் தான்.. தம்பி தம்பி தான்! என்றும் சிவகார்த்திகேயன் பேசியிருந்தார். அந்த பேச்சு, அப்போது அவரை முதிர்ச்சியான நடிகராக பார்க்க வைத்ததாக பலர் பாராட்டியிருந்தனர்.
ஆனால் இப்போது, விஜய்யின் கடைசி படம் என கூறப்படும் 'ஜனநாயகன்' வெளியாகும் அதே காலகட்டத்தில், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படம் திரைக்கு வர இருப்பது, சில விஜய் ரசிகர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. "கடைசி படத்துடன் போட்டியா?", அப்போ சொன்ன மரியாதை எல்லாம் எங்கே போச்சு? என்று சமூக வலைதளங்களில் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, "விஜய் அரசியலுக்குள் நுழையும் முக்கிய கட்டத்தில், அவரது கடைசி படத்துக்கு எதிராக படம் வெளியிடுவது நியாயமா?" என்ற கேள்வியை சில ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதனால் சிவகார்த்திகேயன் மீது "நன்றி மறந்தவர்" என்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன.
ஆனால் இதற்கு எதிர்புறமாக, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு குரலை எழுப்பி வருகின்றனர். "பட வெளியீட்டு தேதி என்பது தயாரிப்பாளர், விநியோகஸ்தர் முடிவு", ஒரு நடிகர் மற்றொரு நடிகருக்காக தன் படத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை, சிவகார்த்திகேயன் எப்போதும் விஜய்யை மரியாதையுடன் தான் பேசியுள்ளார்"என அவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
மேலும், சிவகார்த்திகேயன் எப்போதுமே விஜய்யை தனது இன்ஸ்பிரேஷனாகவே குறிப்பிட்டுள்ளார் என்பதையும், அவர் ஒருபோதும் வாரிசு என்ற பட்டத்தை ஏற்றுக் கொள்ள முயற்சி செய்யவில்லை என்பதையும் அவரது ரசிகர்கள் நினைவூட்டுகின்றனர்.
இதற்கிடையில், 'ஜனநாயகன்' படம் வெளியீட்டிலேயே சில சிக்கல்களை சந்தித்து வருவது, இந்த விவாதங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் வெளியீட்டு பிரச்சனைகள், ஹிந்தி மார்க்கெட்டில் குறைந்த ப்ரோமோஷன் ஆகியவை அந்த படத்தின் வசூல் மீது தாக்கம் ஏற்படுத்தும் என பேசப்படுகிறது. அதே நேரத்தில், 'பராசக்தி' சமூக மற்றும் அரசியல் பேசுபொருளை மையமாக வைத்து உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மொத்தத்தில், ஒருபுறம் விஜய்யின் கடைசி படம் என்ற உணர்ச்சி, மறுபுறம் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி மற்றும் மார்க்கெட், இந்த இரண்டுக்கும் இடையில் உருவான ரசிகர் மோதல்தான் தற்போது தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications