பிரபல பாடகியின் நிலைமை.. ஆன்லைனில் "சுற்றும்" விஜபி போட்டோக்கள்.. மீண்டும் மக்களுக்கு போலீஸ் அலர்ட்
சென்னை: சமீபகாலமாகவே, வங்கிகளின் பெயர்களை சொல்லி மோசடி வேலைகள் அரங்கேறி கொண்டிருக்கின்றன.. அதனால்தான், வாடிக்கையாளர்கள் யாரும், தங்களுடைய வங்கிக்கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் ரகசியமாக வைக்க வேண்டும், யாரிடமும் பகிர வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்து வருகின்றது.. அதுமட்டுமலல, வங்கிக்கணக்கு விபரங்களை பிறருக்கு தந்தால் அவர்களும் குற்றவாளியாக கருதப்பட்டு, கைது செய்யப்படுவார்கள் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். அப்படியிருந்தும் ஆன்லைன் மோசடிகள் பெருகி வருகின்றன. இந்நிலையில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது, பிரதமர், குடியரசு தலைவர், பாடகிகள், நடிகர்கள் பெயரை பயன்படுத்தி மோசடி செய்யும் மூதலீட்டு வலைத்தளங்கள் இருப்பதால் உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களை அலர்ட் செய்துள்ளனர்.

இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ளதாவது: ஸ்ரேயா கோஷல், டாக்டர் சுதா மூர்த்தி போன்ற பிரபல நபர்கள் சம்பந்தப்பட்ட போலி செய்திகளுடன் சமூக ஊடக பதிவுகள் பெருகுவது, சமூக ஊடக பயனர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. சைபர் குற்றப் பிரிவின் சைபர் ரோந்துக் குழு சமூக ஊடக தளங்களில் தீவிரமாக கண்காணித்து மோசடி இணைப்புகள் மற்றும் வலைத்தளங்களை அகற்றி வருகிறது.
மோசடி நடவடிக்கைகளுக்கு எக்ஸ் தளம் அதிகமாக பயன்படுவதைத் தடுக்க செயலூக்கமான நடவடிக்கைகளை எடுக்க எக்ஸ் தளத்திற்கு ஒரு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. ஸ்ரேயா கோஷல் சில வர்த்தக தளங்களை ஊக்குவித்ததாகக் கூறப்படும் தவறான தகவல்களைக் கொண்ட 25 எக்ஸ் பதிவுகளை அடையாளம் கண்டுள்ளது. மேலும் இவை அனைத்தும் சைபர் க்ரைம் போலீசாரால் நீக்கப்பட்டுள்ளன. கூடுதலாக இந்த தவறான செய்திகளுடன் தொடர்புடைய 38 வலைத்தளங்கள் மற்றும் வர்த்தக தளங்கள் அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான போலியான பதிவுகளை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட சில பெயர்கள் "நியூஸ் பல்ஸ்", "ஹாப் பிரைஸ் ஷாப்","ஆசம்",சினிமாக்குத்தூசி ஆகியவை ஆகும். இந்த எக்ஸ் பதிவுகளில் மேலும் அறிக என்பதை கிளிக் செய்யும்பொழுது போலி செய்திகளை A newsmirroruserestart.today, indiantodaynewsp.com, fxroad.com Sunem um,Express247.com, கூட்டிச்செல்லப்படுகின்றனர்.
இதே போன்று புகழ் பெற்ற பொது நபர்களான இந்திய குடியரசுத் தலைவர். இந்தியப் பிரதமர் போன்றவர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளைப் பயன்படுத்தி மோசடி முதலீட்டு தளங்களை ஊக்குவிக்கும் ஒரு போக்கு பேஸ்புக்கில் உருவாகியுள்ளது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் தொடர்புடைய 18 பேஸ்புக் பதிவுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய 15 வலைத்தளங்களை சைபர் க்ரைம் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. இந்த பதிவுகள் மற்றும் போலி செய்தி வலைத்தளங்களை அகற்றுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளில் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930-யை அழைக்கவும் அல்லது www.cybercrimegov.in-ல் புகார் செய்யவும். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications