“சட்னி சாம்பார்” வெப் சீரிஸ்.. ஆபாசம் இல்லை, காமெடி மட்டும் தான்.. ஆனால் “இது” மட்டும் நெருடல்
சென்னை: நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கும் சட்னி சாம்பார் வெப் சீரிஸ் hotstar ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் அந்த சீரிஸ் பார்க்கலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருப்பவர்களுக்கு அது பற்றி சில அப்டேட்டை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சமீபத்தில் திரையில் பார்க்கும் படங்களில் ரத்தம் சொட்ட சொட்ட பார்க்கும் ரசிகர்கள் மிரண்டு போகும் வகையில் தான் பல திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்போதுள்ள பல திரைப்படங்களை குடும்பத்தோடு பார்க்கலாமா? என்றால் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இந்த நிலையில் ஓடிடியில் வெளியாகி இருக்கும் சட்னி சாம்பார் குடும்பத்தோடு பார்க்கும் ஒரு கலகலப்பான சீரிஸாக இருக்கிறது.

சரி கதைக்கு வரலாம் இயற்கையை விரும்பும் ரசிகர்களுக்கு கண்ணுக்கு குளிர்ச்சியான ஊட்டியின் அழகை இந்த சீரிஸ் முழுக்க காட்டி இருக்கின்றனர். ஊட்டியில் "அமுதா கஃபே" என்ற பாரம்பரிய உணவகத்தை ரத்தினசாமி அதாங்க நம்ம நிழல்கள் ரவி நடத்தி வருகிறார். அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கேன்சரால் மோசமான நிலைமையில் இருக்கிறார். அந்த சமயத்தில் தன்னுடைய மகனான கார்த்திக் (கயல் சந்திரன்)னிடம் ஒரு சத்தியம் வாங்குகிறார்.
அதாவது தனக்கு திருமணத்திற்கு முன்பு இன்னொரு லிவிங் உறவில் தான் இருந்ததாகவும் அதன் மூலம் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் அந்த மகனை நான் சந்திக்க வேண்டும் என்று சொல்ல, ரொம்பவும் சாதுவான அப்பா பேச்சை தட்டாத கார்த்திக் இதற்கு சம்மதம் தெரிவித்து தன்னுடைய தங்கையின் கணவர் நிதின் சத்யாவை கூட்டிக்கொண்டு தன்னுடைய தந்தையின் இன்னொரு மகன் யார் என்று தேடி கார்த்திக் போகிறார்.

கார்த்திக் அவரை எப்படி கண்டுபிடித்தார்? அவர் இந்த குடும்பத்திற்குள் வரும் போது ஏற்படும் பிரச்சனைகள் மட்டுமல்லாமல் பல கலகலப்பான காட்சிகளும் தான் இந்த சீரிஸின் மீதம் உள்ள கதையாக இருக்கிறது. கயல் திரைப்படத்தில் பலரையும் ஃபீல் பண்ண வைத்த சந்திரன் இந்த வெப் சீரிஸ் முழுக்க இப்படி ஒரு தம்பி நமக்கு கிடைக்க மாட்டாரா? என்று பலரையும் ஏங்க வைத்திருக்கிறார்.
தன்னுடைய அண்ணனுக்காக வீட்டினரிடம் படும் கஷ்டம், தன்னுடைய காதல் கைகூடாத கவலை, ஏக்கம் என அத்தனையையும் கயல் சந்திரன் அழகாக வெளிப்படுத்துகிறார். அதுபோல பல காமெடி படங்களில் நடித்த நிதின் சத்தியா இந்த வெப் சீரிஸ் முழுக்க பதட்டத்தோடும் ஒருவித அழுத்தத்தோடுமே வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் அவருடைய முட்ட கண்ணை காட்டி அவரும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை காட்டிவிட்டார்.
அதுபோல யோகி பாபுவை சொல்லவே வேண்டாம். எப்போதும் போல தான் இந்த சீரிஸ் முழுக்க அவர் சிரிக்காமல் பார்க்கும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். வாணி போஜன் தன்னுடைய முதல் திருமணம் அதனால் தான் பெற்ற வலி, பிறகு குடிகார தந்தையால் தான் படும் கஷ்டங்கள் அவமானங்கள் என அனைத்தையும் எக்ஸ்பிரஷன் குயின் போல ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிய வைத்து விட்டார்.

இன்னொருவரை கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும் அது சார்லி தான். அவர் வாணி போஜனின் அப்பாவாக நடித்திருக்கிறார். பொறுப்பில்லாத ஒரு குடிகாரன் எப்படி தன்னுடைய சந்தோஷம் மட்டுமே முக்கியம் என்று பலரை அழ வைத்துக் கொண்டிருக்கிறாரோ அதுபோலவே சீரிஸின் ஆரம்பத்திலிருந்து அவர் அந்த கேரக்டராகவே வாழ்ந்து பிறகு ஐயோ என்று சொல்லும் அளவிற்கு ஃபீல் பண்ணவும் வைத்திருக்கிறார்.
அதிலும் ஒரு இடத்தில் இளங்கோ குமாரவேலுடன் சார்லி பேசிக் கொண்டிருப்பார் அப்போது நிழல்கள் ரவியின் ஹோட்டல் சாம்பார் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக அவருடைய போட்டி ஹோட்டல்காரர் சார்லி மூலமாக இளங்கோவிடம் ரகசியங்களை கறக்க பார்க்கும்போது இளங்கோ ஆரம்பத்தில் பணத்திற்கு ஆசைப்படுவது போல பேசி கடைசியில் சார்லிக்கு பல்பு கொடுத்து விடுவார், அந்த நேரத்தில் சார்லியின் அந்த ஒரு கண் பார்வை ரியாகஷன் பார்க்கும் ரசிகர்களை குபீர் என்று சிரிக்க வைத்து விடும்.
சும்மாவே ராதா மோகன் திரைப்படங்களில் சிரிப்புக்கும் காமெடிக்கும் பஞ்சம் இருக்காது இந்த வெப் சீரிஸ் முழுக்க எமோஷனல் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் அங்கே இங்கே காமெடி காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் தான் இருக்கிறது. அதுபோல ஆங்கில இந்தியன் கேரக்டரில் இளங்கோ குமாரவேல் தன்னுடைய நடிப்பால் தனித்து நிற்கிறார். அதிலும் ஒரு இடத்தில் "ஒரு பெண்ணை கொலை செய்தால் மட்டும் அது கொலை இல்லை, அந்த பெண்ணின் கனவுகளை கொலை செய்தாலும் அது கொலைதான்" என்னுடைய மனைவி சீரியலில் நடிக்க வேண்டும் என்று நினைத்தால் அதனால் நான் அனுப்பி வைத்து விட்டேன் என்று சொல்லும் டயலாக் பெண்களை ஃபீல் பண்ண வைக்கும்.
அதுபோல யோகி பாபுவின் அம்மாவாக நடிகை தீபா நடித்திருக்கும் நிலையில் தீபாவிற்கும் யோகி பாபுவிற்கும் செண்டிமெண்ட் காட்சிகள் அழகாக பொருந்தி இருக்கும். ஆனால் ஃப்ளாஷ் பேக்கில் தீபாவின் காதலராக நிழல்கள் ரவிக்கு பதிலாக இன்னொரு நடிகர் நடித்திருக்கிறார். தீபா பிளாஷ்பேக்கு நிழல்கள் ரவிக்கு பொருத்தம் இல்லாதவர் போல தான் இருக்கிறார். ஃப்ளாஷ் பேக்கில் மட்டும் தீபாவிற்கு பதிலாக இன்னொரு கேரக்டர் இருந்திருந்தால் அது சூப்பர் பீல் கொடுத்திருக்கும்.
இந்த வெப் சீரிஸ் முழுக்க காமெடி மட்டுமல்லாமல் சில ஆண்களால் பெண்கள் படும் வேதனைகளும் வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. வாணி போஜன் தன்னுடைய பொறுப்பில்லாத குடிகார தந்தையால் ஒரு ரவுடியை முதல் திருமணம் செய்து பிறகு அவரிடம் இருந்து விவாகரத்து செய்து பல்வேறு துன்பங்களை அனுபவிக்கிறார். அதுபோல நிழல்கள் ரவி ஏமாற்றி விட்டுபோனதால் யோகி பாபுவின் அம்மா தீபாவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். அதுபோல தன்னுடைய கடந்த காலங்களை பற்றி எதுவுமே சொல்லாமல் நிழல்கள் ரவி தன்னுடைய மனைவியையும் ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்.
இத்தனைக்கும் மேலாக தன்னுடைய காதலியின் பெயரை தான் நிழல்கள் ரவி தன்னுடைய ஹோட்டலுக்கு வைத்திருக்கிறார் என்று தெரிந்ததும் அவருடைய மகளாக அமுதா கேரக்டரில் நடித்த மைனா நந்தினி பீல் பண்ணுவதும் அதுவும் ஒரு ஏமாற்றம்தான். அதுபோல அமுதா கேரக்டரில் நடித்த மைனா நந்தினியும் இதுவரைக்கும் காமெடி கேரக்டரில் பார்த்திருந்தாலும் இப்போது சென்டிமென்ட் மற்றும் கோப காட்சிகளிலும் தன்னுடைய நடிப்பை இயல்பாக காட்டியிருக்கிறார்.
இத்தனை சிறப்புகள் இந்த வெப் சீரிஸ் முழுக்க இருந்தாலும் படத்தின் ஆரம்பத்தில் இருந்தே நிழல்கள் ரவி மீது ரசிகர்களுக்கு ஃபீலிங் வர மாதிரி காட்சிகள் இருந்தது. ஊர் முழுக்க அவர் நல்லவர் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தாலும் கடைசியில் அவர் தீபாவை எதற்காக விட்டுட்டு போனார் என்ற செய்தி தெரியும்போது இது வடிவேலுவின் பேக்கரி கதையா இருக்கே என்று சொல்ல வைத்து விடுகிறது. நிழல்கள் ரவி தீபாவை பிரிந்ததற்கு மட்டும் சரியான ஒரு காரணம் இருந்திருந்தால் இந்த வெப் சீரிஸ் இன்னும் அழுத்தமாக இருக்கும். ஆனால் குடும்பத்தோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பார்க்கும் வகையில் ஆபாசம், வெட்டுக்குத்து என்று இல்லாமல் இந்த "சட்னி சாம்பார்" சுவைக்கிறது.












Click it and Unblock the Notifications