19 வயது இளைஞரை காலில் விழவைத்து கொலைவெறித் தாக்குதல்.. பதறவைத்த வீடியோ.. நடந்தது என்ன?
திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் 19 வயது இளைஞர் ஒருவரை மற்றொரு இளைஞர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ்-அப்பில் தன்னை அவமானப்படுத்தியதாக கூறி இளைஞர் ஒருவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து அவரை ஒருவர் தாறுமாறாக தாக்கும் கொடூர காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தன.
இந்த வீடியோ அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய ராகுல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னிப்புக் கேள்
கேரள மாநிலம் கொல்லம், பூயப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவர் பற்றி வள்ளிக்குந்நம் பகுதியைச் சேர்ந்த அச்சு என்ற இளைஞர் வாட்ஸ்அப் குரூப் ஒன்றில் கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அச்சுவை ராகுல் கடந்த திங்கட்கிழமை நேரில் வரவழைத்து, தன்னை வாட்ஸ்அப் குரூப்பில் அவமானப்படுத்தியதற்காக முதலில் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்குமாறு மிரட்டுகிறார்.

கொடூர தாக்குதல்
ராகுல் சொல்வதை ஏற்று குனிந்தபடி மன்னிப்பு கேட்கச் சென்ற அச்சுவை ராகுல் கண்மூடித்தனமாக கொடூரமாகத் தாக்கியுள்ளார். அச்சுவை ராகுல் தாக்கும் காட்சிகளை ராகுலின் நண்பர்கள் சிலர் செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராகுல் கைது
இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியதைத் தொடர்ந்து தாக்குதல் வீடியோவை கண்ட கொல்லம், கருநாகப்பள்ளி போலீசார் ராகுலை அதிரடியாக கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ராகுல், கொலை வழக்கு, பாலியல் பலாத்கார வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் முக்கிய குற்றவாளி என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பு
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் அச்சு தற்போது கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த கொடூர தாக்குதல் வீடியோ தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. சமூக வலைதளத்தில் அவதூறாகப் பதிவிட்டதாகக் கூறி நடைபெற்ற இந்த கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications