கேரளாவில் விபத்தில் சிக்கிய ஆந்திர பேருந்து.. 18 ஐயப்ப பக்தர்கள் படுகாயம்.. 8 வயது சிறுவன் கவலைக்கிடம்
திருவனந்தபுரம்: ஆந்திராவிலிருந்து பக்தர்களை ஏற்றிக்கொண்டு கேரளாவின் சபரி மலையை நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் சுமார் 40 மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் சிக்கிய 8 வயது சிறுவன் மணிகண்டனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சாமியே சரணம் ஐயப்பா! இன்று மாலை திறக்கப்படுகிறது கேரள சபரிமலை ஐயப்பன் கோயில் நடை
விபத்து
ஆந்திரப் பிரதேசத்தின் ஏளுர் நகரின் மாதேபள்ளியை சேர்ந்த 84 ஐயப்ப பக்தர்கள் இரண்டு பேருந்துகளில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்காக புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்துகள் இன்று காலை கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள லாஹா கிராமம் வழியாக சென்று கொண்டிருக்கையில் இரண்டு பேருந்துகளில் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்துள்ளது. இதனை கண்ட பின்னால் வந்த பேருந்துகளில் இருந்த பயணிகள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல கேரள போலீசாரும் விரைந்து வந்து இந்த மீட்பு பணியில் ஈடுபட்டு பக்தர்களை மீட்டுள்ளனர்.
மீட்பு
விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 43 பேரும் காயமடைந்துள்ளனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் பேருந்தில் பயணித்த 8 வயது சிறுவன் மணிகண்டனின் உடல் நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் விரைவாக நடைபெற்றுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் "இன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்தை நானும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன். விபத்தில் சிக்கியவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல பேருந்து அந்த பகுதியிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
ஆந்திர முதலமைச்சர்
இதில் காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் உட்பட 5 பேர் கோட்டயம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் சிலருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட உள்ளது. அதேபோல சிறு காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சைக்கு பின்னர் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். அதேபோல இந்த விபத்து குறித்து பேசியுள்ள ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விபத்து குறித்து அம்மாநில அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக கூறியுள்ளார்.
வழக்குப்பதிவு
மேலும், கேரள மாநில மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து அந்திர மருத்துவர்களும் பக்தர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார். மறுபுறத்தில் விபத்து குறித்து கேரள காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால்தான் விபத்தில் சிக்கியதாக தெரிய வந்துள்ளது. சபரிமலைக்கு பக்தர்களுடன் சென்ற பேருந்து விபத்தில் சிக்கியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.