மலையையே காணலை.. டீ எஸ்டேட்டின் சுவடே இல்லை... சாலியாறு ஆற்றில் மிதந்த 67 உடல்கள்.. வயநாடு துயரம்!
திருவனந்தபுரம்: இயற்கைப் பேரிடரின் கோரத்தாண்டவத்தை எழுதுவதற்கே நெஞ்சு பதை பதைக்கிறதே.. இந்த பெருந்துயரில் சிக்கி உறவுகளை உடைமைகளை இழந்தவர்களின் நிலைமை என்னவாக இருக்குமோ? கேரளாவின் வயநாடு சூரல்மலை-முண்டகக்கை பகுதியில் ஒரு பெருமலையே அப்படியே சரிந்து ஒட்டுமொத்த குடியிருப்புகளை வாரி சுருட்டிக் கொண்டதாம்.. அப்பெருமலையில் தேயிலைத் தோட்டம் என்பது ஒன்று இருந்ததற்காக சுவடு கூட இல்லையாம்... இப்படியான குமுறல்களை கேட்க கேட்க வயநாடு துயரத்தின் கோரமுகத்தை உள்வாங்க முடிகிறது.
கேரளா வயநாடு மலைப் பகுதியில் இடைவிடாது பெய்த மழை ஒரு பக்கம்... பெரு மழையால் பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம் இன்னொரு பக்கம்.. இயற்கைதானே... எத்தனை பெரு மழையை தாங்கும்.. ஊர் உறங்கும் நேரத்தில் பெரும் நிலச்சரிவுகள் அடுத்தடுத்து ஏற்பட ஊர் மூச்சு அப்படியே அந்த மண்ணுக்குள் அடங்கிப் போன துயரத்தை எப்படி சொல்வது?

மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்.. இடுப்பளவு சகதிக்குள் பேரிடர் மீட்புப் படை தோண்ட தோண்ட கொத்து கொத்தாக வெளியே வரும் உடல்கள்.. இப்போது வரை 160 உடல்கள் மீட்கப்பட்டன. 80-க்கும் மேற்பட்டோர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 3,000-க்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதுமட்டுமே இல்லை.. நினைத்துப் பார்க்கவே முடியாத இன்னொரு பேரதிர்ச்சி.. காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடும் சாலியாறு ஆற்றில் திரும்பிய பக்கம் எல்லாம் மிதக்கும் உடல்கள்.. தற்போது வரை 67 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நினைக்கவே முடியாத கொடூரமாக தலை வேறு, கை வேறு என உடல் பாகங்கள் துண்டு துண்டாகவும் நிலம்பூர் வரை மிதந்து கொண்டே இருக்கிறதாம்.
இந்த பெருந்துயர் தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய உள்ளூர்வாசிகளோ, என் கண் முன்னே ஒரு பெருமலை இருந்தது. அந்த மலையையே இப்போது காணவில்லை. அந்த மலையோடு இருந்த தேயிலை தோட்டத்துக்கான சுவடு கூட இல்லை.. ஏதோ ஒரு மண் குவியல் போல தெரிகிறது அந்த மலை. அங்கே இருந்த தேயிலை தோட்ட செடிகளின் வேர்கள்தான் இருக்கிறது... குவிந்து கிடக்கிறது உடல்கள்.. எட்டிப்பார்க்கவே முடியாதுதான் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications