கொரோனாவில் இருந்து மக்களை காக்க 750 கிமீ பாதையாத்திரை...105 நாட்கள் பயணம் செய்த ஐயப்ப பக்தர்
மாற்றுத் திறனாளி பக்தர் ஒருவர் சுமார் 750 கி.மீ தூரம் பாத யாத்திரையாக வந்து , பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வேண்டி, ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி பக்தர் ஒருவர் சுமார் 750 கி.மீ தூரம் பாத யாத்திரையாக வந்து, பதினெட்டாம் படியேறி ஐயப்பனை தரிசனம் செய்தது, மற்ற ஐயப்ப பக்தர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. கொரோனா பிடியில் இருந்து மக்கள் விரைவில் விடுபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நான் இந்த பாதயாத்திரையை மேற்கொண்டதாக கூறியுள்ளார் அந்த பக்தர்.
இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலானவர்கள் கோயிலுக்கு போவதை ஃபேஷனாக வைத்துள்ளனர். சிலர் கோயிலுக்கு போக நேரமில்லை என்று வீட்டிலிருந்தே கடவுளுக்கு வணக்கம் வைத்துவிட்டு தன்னுடைய வேலையை தொடங்குவார்கள்.

கடவுளின் மேல் அதீத பக்தி உள்ளவர்கள் மட்டுமே, கோயிலுக்கு போய் இறைவனை தரிசிப்பது தன்னுடைய முழுமுதற் கடமை என்று நினைத்து, நாள்தோறும் கோயிலுக்கு போய் இறைவனை தரிசித்து விட்டு வருவதுண்டு. அதே போலத்தான், பாதயாத்திரையாக சென்று இறைவனை தரிசிப்பதும். ஆனால், பலர் நானும் பாதயாத்திரை போகிறேன் என்று சொல்லிக்கொண்டு, பேருக்கு ஒரு சில கி.மீ தூரம் மட்டுமே நடந்துவிட்டு, பின்பு நம்மால் முடியாது என்று வாகனத்தில் ஏறிச் சென்று விடுவார்கள்.
இறைவன் மீது அதீத பக்தி கொண்ட பெரும்பாலான பக்தர்கள் என்ன ஆனாலும் சரி என்று, கடவுளின் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, காலில் கொப்பளம் வந்தாலும் பரவாயில்லை என்று அதைப் பொருட்படுத்தாமல் நடந்து சென்றே இறைவனை தரிசித்துவிட்டுத் தான் திரும்புவார்கள். அதிலும் பழனி, திருச்செந்தூர், சபரிமலை மற்றும் தங்கள் இஷ்ட தெய்வத்தை விரதமிருந்து பாதயாத்திரை செல்பவர்கள் எத்தனை கி.மீ தூரம் என்றாலும சரி, சளைக்காமல் நடந்து சென்றே இறைவனை தரிசித்து தங்களின் நேர்த்தி கடனை பூர்த்தி செய்வார்கள்.
அப்படித்தான், ஆந்திர மாநலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் அங்குள்ள அகில பாரத சேவ சங்கத்தின் உறுப்பினர். மாற்றுத்திறனாளியான இவர் அங்குள்ள நகைக் கடை ஒன்றில் கூலி வேலை செய்து பிழைப்பை நடத்தி வருகிறார். இவர் மற்ற பக்தர்களைப் போல் தானும் சபரி மலை ஐயப்பனுக்கு விரதமிருந்து மலைக்கு வருவதாக வேண்டிக்கொண்டார். ஆனால், எப்படி, பாதயாத்திரையாக. அதுவும் கொஞ்ச நஞ்ச தூரம் இல்லை. சுமார் 750 கி.மீ தூரம்.
ஐயப்பனுக்கு வேண்டிக்கொண்டு விரதம் இருந்த சுரேஷ், கடந்த 105 நாட்களுக்கு முன்பு பாதயாத்திரையைத் தொடங்கியவர், சுமார் 750 கி.மீ தூரத்தை அதுவும் ஒற்றைக் காலுடன் நடந்து கடந்து வந்து நேற்று முன்தினம் சபரிமலை சன்னிதானத்தை அடைந்தார். அதே வேகத்தோடு 18ஆம் படிகள் மேலேறிச் சென்று ஐயப்பனை கண் குளிர தரிசனம் செய்தார். இதைக் கண்டு மற்ற ஐயப்ப பக்தர்கள் மெய் சிலிர்த்தனர்.
பாதயாத்திரையாக 750 கி.மீ நடந்து வந்த ஐயப்பனை தரிசித்தது குறித்து பேசிய சுரேஷ், நான் இரண்டாவது தடவையாக பாதயாத்திரையாக வந்து ஐயப்பனை தரிசனம் செய்துள்ளேன். அந்த ஐயப்பனின் அருளாசியால், வரும் வழியில் எனக்கு எந்விதமான இடையூறோ, கஷ்டமோ வரவில்லை. உலக நன்மைக்காகவும், கொரோனா பிடியில் இருந்து மக்கள் விரைவில் விடுபட வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நான் இந்த பாதயாத்திரையை மேற்கொண்டேன். இங்கு வந்து மனநிறைவான தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து கொடுத்த காவல்துறையினருக்கும் தேவசம் போர்டு உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.












Click it and Unblock the Notifications