கேரளாவில் காய்ச்சலுக்கு மருத்துவமனை வந்த சிறுமிக்கு பாத்ரூமில் பிரசவ வலி.. ஆண் குழந்தை பிறப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் சிகிச்சைக்காக வந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்று யாரும் சொல்லவில்லை.
இதனையடுத்து பாத்ரூமில் திடீரென அவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கர்ப்பிணி
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள இரிட்டி தாலுக்காவை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது மகளை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருப்பதாக தாயார் கூறியிருக்கிறார். மருத்துவர்கள் மகளை பரிசோதித்ததில் அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. அதாவது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது சிறுமி என்றும் அச்சிறுமி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்றும் தெரிய வந்துள்ளது.

பிரசவம்
இது குறித்து அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் சிறுமி காணாமல் போயுள்ளார். மறுபக்கம் தாயும் தலைமறைவாகியுள்ளார். சிறிது நேரம் கழித்து மருத்துவமனையின் பிரசவ வார்டில் உள்ள கழிவறையில் குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து சென்று பார்த்தபோது பச்சிளம் குழந்தை ஒன்று இருப்பதும் அருகே அதன் தாய் மயக்கமாக சரிந்து கிடப்பதும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடல்நிலை
இதனையடுத்து தாய், சேய் இருவரையும் மீட்டு சிகிச்சையளித்துள்ளனர். ஆனால் இருவரின் உடல் நிலையும் மோசமானதையடுத்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து மருத்துவமனை தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது போக்சோ வழக்கு என்பதால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட முடியாது.

வாக்குமூலம்
இது தொடர்பாக சிறுமி மற்றும் அவரது தாயிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சிறுமியும் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். இதில் தொடர்புடைய குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார். சிறுமி 12ம் வகுப்பு படித்து வருகிறாள்." என்று கூறியுள்ளனர். வேறு சிகிச்சைக்காக வந்த சிறுமி திடீரென கழிவறையில் குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கான உரிமைகளை உரத்து பேசும் மாநிலத்திலேயே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications