மனைவியிடம் கொஞ்சி கொஞ்சி பேசிய நண்பன்.. உற்று கவனித்த கணவர்.. அப்பறம் என்ன நடந்ததுன்னு பாருங்க
ஸ்ரீகுமார் எவ்வளவு சொல்லியும் ஆனந்த் இதனை நிறுத்தவில்லை. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடந்துள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் தனது மனைவியுடன் நெருக்கமாக பழகிய நண்பனை இளைஞர் ஒருவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சக நண்பனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த்(28). எலக்டீரிஷியன் தொழில் செய்து வரும் இவர் கடந்த 5ம் தேதியிலிருந்து காணவில்லை என்று அவரது தந்தை கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கூடல் காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பகுமார் தலைமையிலான போலீசார் அவரை தேட தொடங்கியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் ஆனந்த்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் காவல்துறையினருக்கு களஞ்சூர் பகுதியிலிருந்து அழைப்பு ஒன்று வந்திருக்கிறது.
சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது வனப்பகுதியையொட்டிய கால்வாய் ஒன்றில் அடையாளம் ஆண் சடலம் இருந்துள்ளது. சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக முதல் கட்ட விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் இது ஒரு கொலை என்பதை உறுதி செய்தனர். அதற்கான அனைத்து ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகவும் கூறினர்.

ஆதாரம்
அதாவது, சடலம் கிடந்த கால்வாயிலிருந்து 500 மீட்டர் தொலைவில் மண் தரையில் ரத்தக்கறை இருந்துள்ளது. அங்கிருந்து கால்வாயை நோக்கி வரும் சில இடங்களிலும் ரத்தக்கறையை இவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதேபோல அருகில் இருந்த பாறை ஒன்றில் படிந்திருந்த ரத்தக்கறையை யோரோ தண்ணீர் கொண்டு கழுவ முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தது ஆனந்த் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தது. அதில் ஆனந்த்தின் தலையில் இரும்பு ராடு கொண்டு கொடூரமாக தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

விசாரணை
பின்னர் விசாரணை தீவிரமடைந்தது. இதற்கென தனிக்குழு ஒன்று அமைக்கப்பட்டு விசாரிக்கையில் கடைசியாக ஆனந்த்தின் செல்போன் எண்ணிலிருந்து அவருடைய நண்பரான ஸ்ரீகுமாரின் மனைவிக்கு அழைப்பு சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது இவர்கள் இருவருக்கும் இடையேயான உரையாடல்கள் மணிக்கணக்கில் இருந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பாக ஸ்ரீகுமாரின் மனைவியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் சில தகவல்கள் கிடைக்கப்பெற்றன. அதாவது ஸ்ரீகுமாரின் மனைவியும், ஆனந்துடம் நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்ததாகவும் இது தனது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் ஸ்ரீகுமாரின் மனைவி கூறியுள்ளார்.

நண்பன்
பின்னர் ஸ்ரீகுமாரை தேடியபோது அவர் தலைமறைவாகியுள்ளார். இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின்னர் வனப்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரிக்கையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதாவது தனது மனைவியிடம் ஆனந்த் கொஞ்சி பேசுவது பிடிக்காததால் ஆனந்துக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் ஆனால் எவ்வளவு சொல்லியும் அதனை கேட்காமல் மீண்டும் மீண்டும் ஆனந்த் எனது மனைவியிடம் தொடர்பில் இருந்ததால்தான் கொலை செய்ததாகவும் ஸ்ரீகுமார் ஒப்புக்கொண்டார். மேலும் அவர் கூறியதாவது, "தாங்கள் வழக்கமாக குடிக்கும் இடத்தில் வைத்து ஆனந்துக்கு மது ஊற்றிக்கொடுத்தேன். அவர் அளவுக்கு அதிகமாக குடித்து போதையாகிவிட்டார்.

கொலை
அப்போது கூட எனது மனைவிக்குதான் அவர் போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். நான் ஆனந்தை வீட்டுக்கு அழைத்துச் செல்வதாக கூறியதால் மற்ற நண்பர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஆனந்தின் தலையில் இரும்பு ராடால் தாக்கினேன். அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். பின்னர் அங்கிருந்து 500 மீ தொலைவில் உள்ள ஓடையில் உடலை கொண்டு போய் போட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார்" வாக்குமூலத்தையடுத்து ஸ்ரீகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications