நடிகை ஸ்ரீவித்யாவின் அவ்வளவு சொத்துகளையும் ‘ஆட்டைய’ போட்ட அமைச்சர்- உறவினர்கள் மீண்டும் பரபர புகார்!
திருவனந்தபுரம்: மறைந்த சீனியர் நடிகை ஸ்ரீவித்யாவின் அத்தனை சொத்துகளையும் தற்போது கேரளா அமைச்சராக உள்ள கேபி கணேஷ் குமார் கபளீகரம் செய்துவிட்டதாக அவரது உறவினர்கள் மீண்டும் குற்றம்சாட்டி இருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் ஸ்ரீவித்யா. 1976-ல் ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்தார். ஆனால் 1980-ல் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர். தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு இடம் பெயர்ந்து கடைசி நாட்களை மருத்துவமனையில் துயரங்களை அனுபவித்த 2006-ம் ஆண்டு மறைந்தார் ஸ்ரீவித்யா.

ஸ்ரீவித்யா உயில்: ஸ்ரீவித்யா மறைந்தது முதலே அவரது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் குறித்து சர்ச்சை இருந்து வருகிறது. ஸ்ரீவித்யா தமது சொத்துகள் அனைத்தையும் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி அதன் பெயருக்கு சொந்தமாக்கி உயில் எழுதி வைத்திருந்தார். இந்த அறக்கட்டளையின் பொறுப்பாளராக மலையாள நடிகராக இருந்த கணேஷ்குமார் நியமிக்கப்பட்டார். இவர் தேர்தல்களில் போட்டியிட்டு வென்று தற்போது கேரளாவின் அமைச்சராகவும் உள்ளார்.
கணேஷ்குமார் மீது சரமாரி புகார்: ஸ்ரீவித்யா மறைந்தது முதலே அவரது சொத்துகளை உயில்படி செயல்படுத்தாமல் அனைத்தையும் கணேஷ்குமார் அபகரித்துவிட்டார்; மருத்துவமனையில் மரணத்தின் தருவாயில் கூட ஸ்ரீவித்யாவுக்கு மருந்துகளை வாங்க கணேஷ்குமார் உதவவில்லை என்பதெல்லாம் அவ்வப்போது ஸ்ரீவித்யாவின் உறவினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள். தற்போது ஸ்ரீவித்யாவின் உறவினரான விஜயலட்சுமி மீண்டும் கணேஷ்குமாரை மையமாக வைத்து பேட்டி கொடுத்திருப்பது கேரளாவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
என்ன செய்தார் அமைச்சர் கணேஷ்குமார்?: இது தொடர்பாக ஸ்ரீவித்யாவின் உறவினர் விஜயலட்சுமி அளித்த பேட்டியில், கணேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி உம்மன் சாண்டி முதல்வராக இருந்த போது மனு கொடுத்தோம். அவரும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க தொடங்கினார். ஆனால் என்ன காரணத்தாலோ அந்த விசாரணை நடைபெறவில்லை. அதன் பின்னர் ஸ்ரீவித்யாவின் சொத்துகள் குறித்து வழக்கு தொடர சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு செய்தோம். அவரும் எந்த காரணமும் சொல்லாமலேயே ஒதுங்கிக் கொண்டார். தற்போது அமைச்சராக இருக்கிறார் கணேஷ்குமார். எங்களைப் பொறுத்தவரை ஸ்ரீவித்யாவின் உயிலை அவர் நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் கோரிக்கை என கூறியுள்ளார். இப்பேட்டி கேரளா அரசியலில் அமைச்சர் கணேஷ்குமாருக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications