வயநாடு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி? பிரியங்கா காந்திக்கு எதிராக பாஜக வியூகம்! பரபர தகவல்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் நடிகை குஷ்புவை களமிறக்கும் திட்டம் உள்ளதாகவும், வேட்பாளர்களின் பட்டியலில் குஷ்புவின் பெயர் ‛டாப்'பில் உள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 2019 லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில் ரேபரேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோற்றார். வயநாட்டில் வெற்றி பெற்றார். இதையடுத்து வயநாடு தொகுதி எம்பியாக இருந்தார். அமேதியில் தோற்றாலும் கூட வயநாடு தொகுதி மூலம் ராகல் காந்தி தன்னை அரசியலில் நிலைநிறுத்தி கொண்டார்.

அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தொகுதியிலும் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் களமிறங்கினார். உத்தர பிரதேச மாநிலத்தில் தனது தாய் எம்பியாக இருந்த ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் அவர் போட்டியிட்டார். இதில் 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
அதன்பிறகு ரேபரேலி எம்பி பதவியை தக்க வைத்து கொண்ட ராகுல் காந்தி, வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவை பொறுத்தவரை அதிக லோக்சபா தொகுதிகள் உத்தர பிரதேசத்தில் தான் உள்ளது. அங்கு 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. மத்தியில் ஆட்சியை பிடிக்க உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால் தற்போது காங்கிரஸ் உத்தர பிரதேசத்தில் கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. இதனால் உத்தர பிரதேச அரசியலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தான் வயநாடு லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரியங்கா காந்தி தற்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக உள்ள நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். ஆனாலும் அவர் இன்னும் தேர்தலில் போட்டியிடவில்லை. முதல் முறையாக அவர் வயநாடு தொகுதியில் களமிறங்க உள்ளார்.
இந்நிலையில் தான் பிரியங்கா காந்தியை எதிர்த்து பலம்வாய்ந்த வேட்பாளரை களமிறக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. அதன்படி நடிகை குஷ்புவின் பெயர் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. நடிகை குஷ்பு, திமுக, காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டார். தற்போது அவர் பாஜகவில் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் நடிகை குஷ்புவை வயநாடு தொகுதியில் களமிறக்குவது பற்றி பாஜக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பாஜக மேலிடம், கேரளா மாநில பாஜக தலைவர்களில் கருத்துகள் கேட்டுள்ளனர். கேரளா மாநில தலைவர்கள் ஓகே சொல்லும்பட்சத்தில் அதன்மீது மேலிடம் ஒப்புதல் அளித்து குஷ்புவை வேட்பாளராக அறிவிக்கும்.
வயநாடு லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவராக உள்ளார். மக்களுக்கு தெரிந்த முகமாக இருக்கிறார். அதேபோல் பிரியங்கா காந்திக்கு நிகராக நடிகையாக புகழ்பெற்ற குஷ்புவை களமிறக்கலாம் என்று பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளது. குஷ்புவை எடுத்த கொண்டால் அவர் 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்து செயல்பட்டார். அதன்பிறகு 2014ல் திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பையும் வகித்தார். அதன்பிறகு 4 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய குஷ்பு பாஜகவில் செயல்பட்டு வருகிறார்.
மேலும் இந்த தொகுதியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு தவிர எம்டி ரமேஷ், சோபா சுரேந்திரன், ஏபி அப்துல்லா குட்டி மற்றும் ஷான் ஜார்ஜ் உள்ளிட்டவர்களின் பெயர்களும் முன்னிலையில் உள்ளது. இந்த தொகுதியில் இடதுசாரிகளின் கூட்டணி (எல்டிஃஎப்) சார்பில் சத்யன் மேகேரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி களமிறங்குவது உறுதியான நிலையில் பாஜக வேட்பாளர் தேர்வில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த லோக்சபா தேர்தலில் (2024) இந்த தொகுதியில் ராகுல் காந்தி மொத்தம் 6,47,445 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய இடதுசாரிகளின் கூட்டணி வேட்பாளராக அன்னி ராஜா 2 லட்சத்து 83 ஆயிரத்து 023 ஓட்டுகள் பெற்றார். பாஜக வேட்பாளரான சுரேந்திரன் 1 லட்சத்து 41 ஆயிரத்து 45 ஓட்டுகள் பெற்றார். இதன்மூலம் ராகுல் காந்தி 3,64,422 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
அதற்கு முன்பாக 2019 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி மொத்தம் 7,06,367 ஓட்டுகள் பெற்று வெற்றியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பிபி சுனீர் 2,74,597 ஓட்டுகளும், பிடிஜேஎஸ் வேட்பாளர் துஷார் வேளப்பள்ளி 78,816 ஓட்டுகளும் பெற்றார். இதன்மூலம் ராகுல் காந்தி 4,31,700 ஓட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடியிருந்தார்.
வயநாடு லோக்சபா தொகுதியை எடுத்து கொண்டால் இது காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்து வருகிறது. கடந்த 2009, 2014, 2019, 2024 என 4 லோக்சபா தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. இதில் 2009, 2014ல் காங்கிரஸ் கட்சியின் ஷாநவாஸ் என்பவர் வென்ற நிலையில் 2019, 2024ல் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது கவனிக்கத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications