72 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்தித்த கேரள தம்பதி… கேரளாவில் நெகிழ்ச்சியான ஒரு 96 திரைப்படம்
திருவனந்தபுரம்: 1946ம் ஆண்டு பிரிந்த தம்பதி, ஒன்றல்ல... இரண்டல்ல... கிட்டத் தட்ட 72 ஆண்டுகள் பிரிவுக்கு பிறகு இணைந்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
அன்பால் இணையும் இதயங்கள் என்றும் சாகாவரம் பெற்றவை என்று கூறுவது உண்டு. அன்பு எங்கிருக்கிறதோ அங்கு மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும் என்றும் சொல்வது வழக்கம். 72 ஆண்டுகளுக்கு முன்பு காலதேவனின் கோலத்தில் திசை மாறிய வாழ்க்கை பாதையில்... பிரிந்த தம்பதிகள் தற்போது மீண்டும் ஒன்று கூடி சந்தித்துள்ளன.
காலங்கள் பல்வேறு பாடத்தை கற்றுக் கொடுத்தாலும்,இல்லற வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலும், மன உறுதியின் மூலமாகவும் கிடைக்கும் பயன்கள் அளவிட முடியாத ஒன்று. அப்படிப்பட்ட நிகழ்வு கேரளாவில் உள்ள தம்பதிகள் வழியாக இந்த உலகுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.

18 வயதில் நாராயணன் திருமணம்
1946ம் ஆண்டு 18 வயதுடைய நாராயணன் என்பவர் தமது 14 வயது முறைபெண்ணான சாரதாவை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இருவரும் வெறும் 8 மாதங்கள் மட்டுமே திருமண பந்தத்தில் இணைந்து வாழ்ந்துள்ளனர்.அவர்களின் திருமணம் நடைபெற்ற தருணத்தில் இந்தியாவில் இருந்தது ஆங்கிலேயர்களின் ஆட்சி.

போராடிய விவசாயிகள்
திருமணமான சில மாதங்களில் கேரளாவில் உள்ள விளை நிலங்களை எல்லாம் நிலபிரபுக்களுக்கு கீழ் கொண்டு வந்து அவர்களின் கீழ் கொத்தடிமைகளாக வேலை பார்க்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை ஏற்காத விவசாய பெருமக்கள். ஒன்று திரண்டு பெரும் போராட்டத்தில் குதித்தனர்.

போராட்ட களத்தில் நாராயணன்
அந்த போராட்டத்தில் தம்மையும் இணைத்து கொண்டார் நாராயணன் நம்பியார். போராட்டத்தை தொடர்ந்து அவரும், அவரது தந்தை தாலியன் ராமன் நம்பியாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் நாராயணன் நம்பியாரின் தந்தை சிறையிலேயே சுட்டுக் கொல்லப்பட, நாராயணன் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

சாரதாவுக்கு திருமணம்
இந்நிலையில் சாரதா ஆங்கிலேயர்களின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு அஞ்சி, தமது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். சிறிது காலம் கடந்த பின் குடும்பத்தினர் சமாதானப்படுத்தி சாரதாவிற்கு வேறு ஒரு திருமணத்தை செய்து வைத்துள்ளனர்.

சிறைவாழ்க்கை முடிவு
8ஆண்டுகளுக்கு பின்னர் 1954ம் ஆண்டு சிறைவாசம் முடிந்து மனைவியை பார்க்க ஆவலுடன் நாராயணன் வருகிறார். ஆனால் தமது மனைவிக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றதை அறிந்து கொண்டு, அவரை தொந்தரவு செய்யாமல், தனக்கென ஒரு வாழ்க்கையை தேடி கொள்கிறார்.

நாவலால் தெரிந்தார் நாராயணன்
தனித்தனியான இல்லற வாழ்க்கையில் சாரதாவிற்கு ஆறு பிள்ளைகளும், நாராயணனுக்கு மூன்று பிள்ளைகளும் உள்ளனர். இருவரும் தங்களது குடும்ப வாழ்க்கையை மிகவும் இனிமையாகவே கழித்துள்ளனர். நாராயணன் வாழ்க்கையை வைத்து ஒரு நாவலாக எழுத்தாளர் சந்தா கவுபாய் எழுதியுள்ளார்.

சந்தித்த இரண்டு குடும்பங்கள்
அந்த சம்பவத்தை அறிந்த சாரதாவின் மகன் பார்கவன் என்பவர், எழுத்தாளரை சந்தித்து இரண்டு குடும்பங்களிடமும் பேசியுள்ளார். பின்னர் நாராயணன், சாரதாவின் சந்திப்பிற்கு இரு குடும்பத்தாரும் ஏற்பாடு செய்தனர். இந்த சந்திப்பை சாராதாவின் மகன் பார்கவன் வீட்டில் நிகழ்ந்தது.

தயாரான உணவு வகைகள்
அப்போது, நாராயணனை வரவேற்க சாரதாவின் வீட்டில் கேரளாவின் அனைத்து உணவு வகைகளும் தயாராகின. வீட்டுக்குள் நாராயணன் நுழைய... 72 ஆண்டுகள் கழித்து இருவரும் முதலில் மவுனங்களை மட்டும் பரிமாறி கொள்கின்றனர்.

பார்வையான மவுனம்
சிறிது நேரம் கழித்து மெதுவாக தமது பேச தொடங்குகிறார் நாராயணன். இருவருக்குமான உரையாடல் கேரள சினிமாவின் புதிய திரைக்கதை என்றே சொல்லலாம். அத்தனை நெகிழ்ச்சியான தருணங்களாக அடையாளப் படுத்தப்பட்டன.

கோபம் இல்லை என விளக்கம்
நாராயணனின் பேச்சுக்கு பதிலளித்த சாராதா ‘எனக்கு யார் மேலேயும் கோபம் இல்லை என்கிறார். அப்புறம் ஏன் இந்த அமைதி என பாசத்தோடு கேட்கிறார் நாராயணன். இப்படி இருவரும் தங்களுக்குள்ளான பேச்சைப் தொடங்கி பேச ஆரம்பித்தனர். பின்னர் சில மணி நேரம் கழித்து போய்ட்டு வருவதாக நாராயணன் கூற, அந்த வயதிலும் சற்றே வெட்கத்துடன் தலை குனிந்தே பதிலளிக்கிறார் சாரதா.

திருமண பந்தத்தில் பாசப்பறவைகள்
எத்தனை வருடங்கள் ஆனாலும் திருமண பந்தத்தில் இணைந்த இவ்விரு பாசப் பறவைகள், ஒரு கூட்டில் வாழ்ந்த அனுபவங்களின் நிழலாகவே பார்க்கப்படுகிறது. கேரளாவில் நிகழ்ந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவம், தமிழில் அண்மையில் வெளிவந்த '96' திரைப்படம் போல் இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications