மூளையை தின்னும் அமீபா! கேரளாவில் மேலும் ஒருவர் பலி.. அதிகரிக்கும் அச்சம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு இன்று மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
கேரளாவில் ஆகஸ்ட் மாதம் முதல், 'பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸ்' எனப்படும் மூளையை தின்னும் அமீபா நோய் தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 56 வயதான எம். ஷோபனா என்பவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மலப்புரம், வண்டூரைச் சேர்ந்த ஷோபனா, அவரது நிலை மோசமானதைத் தொடர்ந்து செப்டம்பர் 4 அன்று கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து ஷோபனா சுயநினைவின்றி இருந்துள்ளார். அவர் பயன்படுத்திய அனைத்து நீர் ஆதாரங்களும் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமீபிக் என்செபாலிட்டிஸ் நோயால் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில், மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு நோயாளி மற்றும் காசர்கோடைச் சேர்ந்த ஒரு நோயாளி ஆகியோர் கவலைக்கிடமாக உள்ளனர். மற்றவர்களும் கேரளாவின் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
முன்னதாக, வயநாடு மாவட்டத்தின் பத்தேரியைச் சேர்ந்த 45 வயதான ரத்தீஷ் செப்டம்பர் 6 சனிக்கிழமையன்று உயிரிழந்தார். கேரளாவில், நாவிங்ளேரியா ஃபௌலேரி என்ற அமீபா, இந்த உயிரிழப்புகளுக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
இந்த அமீபா தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் காணப்படுகிறது. இது மூளை மற்றும் மூக்கைப் பிரிக்கும் தட்டு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையைப் பாதிக்கிறது. இந்த அரிதான அமீபா சூடான நீரில் செழித்து வளர்கிறது. உலக வெப்பமயமாதல், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் காரணமாக நீர்நிலைகளில் இதன் இருப்பு அதிகரித்து வருகிறது. கேரள மாநில சுகாதாரத் துறை இந்த நோய் குறித்து விழிப்புணர்வையும், சுற்றுச்சூழல் கண்காணிப்பையும் பரப்புவதில் கவனம் செலுத்துகிறது.












Click it and Unblock the Notifications