'தரைமட்டம் ஆக்கிவிடுவோம்..' கொச்சி கடற்படை தளத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. உச்சக்கட்ட அலர்ட்.!
திருவனந்தபுரம்: கொச்சி கடற்படை தளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் தீவிர சோதனையில் கேரள போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள மிகப் பெரிய துறைமுகங்களில் ஒன்று கேரளாவில் அமைந்துள்ள கொச்சி துறைமுகம். இங்கு ஆண்டுதோறும் 2000 மேற்பட்ட கப்பல்கள் வந்து செல்கின்றன.

கப்பல் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இயங்கும் கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட்டில் எனப்படும் கப்பல் கட்டும் தளமும் இங்கு தான் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த கப்பல் கட்டுமான தளத்திற்கு மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் அனுப்பிய இந்த மின்னஞ்சலில், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு விரைந்த போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாட்டம் இருந்ததா என்பது குறித்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், கொச்சி இந்தியாவின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் தான் கட்டப்பட்டது. இந்த விமானம் தாங்கி கப்பல் சமீபத்தில் தான், தனது முதல் கடல் பயணத்தை நிறைவு செய்தது.
இந்த ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் இப்போது அங்கு தான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் சோதனையைத் தீவிரப்படுத்திய கொச்சி போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை தொடங்கியுள்ளனர்.