மலையாள நடிகை கொடுத்த பாலியல் புகார்.. கைதான பாபி செம்மனூருக்கு நீதிமன்றம் ஜாமீன்!
திருவனந்தபுரம்: மலையாள நடிகை கொடுத்த பாலியல் புகாரில், கேரளாவின் பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மலையாள நடிகை நகை கடை திறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்நிலையில் பாபி, தனது நகைகடையின் புதிய கிளையை திறந்து வைக்க வருமாறு நடிகையை அழைத்திருக்கிறார். ஆனால் நடிகை இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது நடந்த சில நாட்கள் கழித்து நடிகையின் சோஷியல் மீடியா போஸ்ட்டுக்கு ஆபாசமான பதிவுகள் வந்திருக்கின்றன. தொடர்ந்து இந்த பிரச்சனை தீவிரமடைந்ததால், நடிகை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். மட்டுமல்லாது முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் புகார் அளித்திருக்கிறார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை தீவிரமடைந்தது. விரைவில் முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதேபோல சிலர் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையின் இறுதியாக, பாபி செம்மனூர் எனும் நகைக்கடை அதிபர் கைது செய்யப்பட்டார். இவரை தெரியாதவர்கள் கேரளாவில் குறைவு. கடந்த காலங்களில் சமூக அக்கறை கொண்ட நபராக தன்னை இவர் காட்டிக்கொண்டிருந்திருக்கிறார்.
குறிப்பாக, நகைக்கடை திறப்பு விழாவுக்கு மாரடோனாவவை அழைத்து வந்திருந்தார். கேரளாவை பொறுத்தவரை கால்பந்துதான் எல்லாம். சச்சின் டெண்டுல்கரா? மரடோனாவா? என்று கேட்டால் மாரடோனா என்றுதான் மொத்த கேரளாவும் முழங்கும். இவ்வளவு வெறி கொண்ட ரசிகர்களுக்காக மாரடோனாவை கேரளாவுக்கு அழைத்து வந்திருந்தார் பாபி செம்மனூர். மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கும் இவருக்கு எதிராக பாலியல் புகார் பதிவான நிலையில் கேரளாவை தாண்டி, தேசிய அளவில் இது விவாதமாக வெடித்திருந்தது.
இது தொடர்பான வழக்கில் கடந்த 8ம் தேதி பாபியை கேரள போலீஸ் கைது செய்திருந்தது. அவர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 75,67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இவை இரண்டும் பாலியல் துன்புறுத்தல் மற்றும் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தி ஆபாசமான கருத்துக்களை வெளியிடுதலை தடை செய்தல் சட்டங்களாகும்.
இந்நிலையில், தனக்கு ஜாமீன் கேட்டு பாபி, கேரள உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார். உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், "பாடி ஷேமிங் எனப்படும், உடல் அவமதிப்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. கருப்போ, சிவப்போ, ஒல்லியோ, உடல் பருமனோ இங்கு எல்லாம் ஒன்றுதான். எனவே மற்றவர்களை பற்றி கருத்து தெரிவிக்கும் முன் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல மனுதாரர் கூறிய கருத்துக்கள் இரட்டை அர்த்தம் கொண்டவை என்பது எல்லோருக்கும் தெரியும். மலையாளம் தெரிந்த யார் வேண்டுமானாலும் இந்த இரட்டை அர்த்தத்தை புரிந்துக்கொள்ள முடியும்" என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதனையடுத்து ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இனி இதேபோன்ற புகார் வந்தால் நிச்சயம் ஜாமீன் வழங்கப்பட மாட்டாது என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications