தேன் கூடு, குருவி கூடு, குளவி கூடெல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்க! அதென்ன புத்தக கூடு.. வைரல் வீடியோ
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பெரம்குளத்தில் கிராமத்தினரே படிப்பதற்காக புத்தக கூடு ஒன்று வைக்கப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு என்பது பழமொழி. அதற்கேற்ப நம் வாழ்நாள் முடிவதற்குள் கணிசமான புத்தகங்களை படித்து முடித்துவிடலாம். புத்தகங்களை படிப்பதன் மூலம் மேலும் மேலும் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்.
பள்ளி மாணவர்களுக்கு சிறிய வயதிலிருந்தே புத்தகம் படிக்கும் ஆர்வத்தை வளர்க்கும் வகையில் சிறிய கதை புத்தகங்கள் அடங்கிய நூலகம் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. அது போல் கல்லூரிகளிலும் நூலகங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மாநில அரசுகள்
நாடு முழுவதும் அந்தந்த மாநில அரசுகள் சார்பில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அது போல் மாவட்ட தலைநகரங்களில் பெரிய அளவிலான நூலகங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வீடுகளில் புத்தக பிரியர்கள் வீடு முழுவதும் நூல்களை வைத்திருப்பார்கள். அது போல் அலுவலகங்களில் நூல்கள் இருக்கும்.

கல்லூரி படிப்பு
பள்ளி, கல்லூரி படிப்பு முடிந்தாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் அறிவாற்றலை வளர்த்துக் கொள்வதோடு நல்ல பல விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம். வீடுகளில், பள்ளிகளில், கல்லூரிகளில், நூலகங்களில் புத்தகங்கள் வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம்.

கிராம புத்தகக் கூடு
ஆனால் திருவனந்தபுரத்தில் ஒரு கிராமத்தில் கிராம புத்தகக் கூடு எனும் ஒன்று உள்ளது. பெட்டிக் கடை வடிவில் காணப்படும் இந்த பெட்டியில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டு அவற்றை கிராம மக்கள் எடுத்துச் சென்று படித்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள்.

பெரும்குளத்தில் புத்தகக் கூடு
கேரளாவில் முதல் முறையாக பெரும்குளத்தில் இந்த புத்தகக் கூடு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவை கேரளா சுற்றுலா துறை வெளியிட்டுள்ளது. அதிக கல்வியறிவு கொண்ட மாநிலங்களில் நாட்டிலேயே முன்னணி இடத்தில் இருப்பது கேரளா ஆகும். ஒரு சாலையில் சிறிய ரேக் போன்ற cupboard உள்ளது. அதை திறக்கும் ஒருவர் அதிலிருந்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு செல்கிறார். இது பார்ப்பதற்கே அழகாக உள்ளது.

அதிகம் பகிரும் வீடியோ
அந்த புத்தக கூடுக்கு பக்கத்தில் ஒரு நீளமான இருக்கை உள்ளது. அந்த இருக்கையில் அமர்ந்து படிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. புத்தகத்தை அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வைத்துவிட்டு செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக கூட்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. செப்டம்பர் 8ஆம் தேதி கல்வியறிவு தினம் கொண்டாடப்படுவதால் இந்த வீடியோ நேற்றைய தினம் அதிகம் பகிரப்பட்டது.

புத்தகக் கூடு
இது போல் மற்ற நகரங்களிலும் புத்தக கூடு வைத்து மக்களின் கல்வியறிவை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும். கேரளாவை பொருத்தமட்டில் கல்வியறிவு சதவீதம் 96.2 ஆக உள்ளது. இவர்களில் 97.4 சதவீதம் ஆண்களும், 95.2 சதவீதம் பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். இந்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள். நல்ல முயற்சி என்றும் கல்விக்கு சிறந்த திட்டம் என்றும் பலர் சிலாகித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications