பாஜக-காங். ரகசிய கூட்டணி...விரைவில் ஆதாரம் வெளியாகும்... பினராயி விஜயன் பகீர் குற்றச்சாட்டு
திருவனந்தபுரம்: பாஜகவின் ஆதரவுடன் சில காங்கிரஸ் தலைவர்கள் வெல்ல முயல்வதாகக் கேரளா முதல்வர் பினராயி விஜயன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டுடன் இணைந்து கேரளாவில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஐந்து மாநில தேர்தல் முடிவுகளும் மே 2ஆம் தேதி அறிவிக்கப்படும்.
கேரளாவைப் பொறுத்தவரை இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே மட்டுமே முக்கிய போட்டி நிலவுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகளின் அணிக்கு எதிராகக் காங்கிரஸ் வலுவான ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளது.

காங்கிரஸ்-பாஜக கூட்டணி?
கேரளாவில் பாஜக மூன்றாவது அணியாக உருவாகக் கடுமையாக முயன்று வருகிறது. இதற்காக மெட்ரோ மேன் ஸ்ரீதரனையும் அக்கட்சி முன்னிறுத்தி பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா பாஜகவின் மூத்த தலைவரும் அக்கட்சியின் ஒரு சட்டசபை உறுப்பினருமான ஓ.ராஜகோபால், கடந்த காலங்களில் இடதுசாரிகளைத் தோற்கடிக்கக் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தல் வியூகம் வகுத்ததாகத் தெரிவித்திருந்தார்.

பினராயி விஜயன் தாக்கு
நேர் எதிர் துருவங்களாக உள்ள காங்கிரசும் - பாஜகவும் இடதுசாரிகளைத் தோற்கடிக்கக் கைகோர்ப்பது குறித்து சிந்தித்ததாக ராஜகோபால் பேசிய பேச்சு இணையத்தில் வைரலானது. இந்நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், "சில முக்கிய காங்கிரஸ் தலைவர்களும்கூட பாஜகவின் உதவியுடன் கேரள சட்டசபையில் நுழைய முயல்கின்றனர். அவர்கள் இதற்காகப் பேரத்திலும் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில், இது குறித்து விரிவான விவரங்கள் வெளிவரும்" என்றார்.

இரண்டும் மக்கள் விரோத கட்சிகள்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதுதான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமை தனியார் நிறுவனங்கள் வழங்கப்பட்டது என்றும் இதை அப்போது கடுமையாக எதிர்த்த பாஜக, ஆட்சிக்கு வந்ததும் அதையே தொடர அனுமதிக்கிறார்கள் என்றும் அவர் கூறினார். மேலும், காங்கிரஸ் பாஜக என இரண்டுமே மக்கள் விரோத கட்சிகள் தான் என்றும் அவர் விமர்சித்தார்.

தேர்தல் கருத்துக்கணிப்புகள்
தொடர்ந்து தேர்தல் கருத்துக்கணிப்புகள் குறித்துப் பேசிய அவர், "இடதுசாரிகளே கேரளாவில் மீண்டும் ஆட்சியை அமைக்கும் எனக் கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதனால் இடதுசாரி தொண்டர்கள் மகிழ்ச்சி அடைய வேண்டாம். இது ஒரு அறிகுறி மட்டுமே. தொண்டர்கள் அனைவரும் தீவிரமாகத் தேர்தல் பணி செய்தால் மட்டுமே நமக்கு வெற்றி கிடைக்கும்" என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications