கேரளா முழுக்க ராகுல் காந்திக்கு ஆதரவு! நூலிழையில் தோற்கும் இடதுசாரிகள்! பாஜக நிலை மோசம்! புது சர்வே
திருவனந்தபுரம்: நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், கேரளாவில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு அதிகம் என்பது குறித்து மாத்ருபூமி மற்றும் பி-மார்க் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் மிக விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தேசியளவில் பார்க்கும் பாஜக பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது.

அதன்படி மாத்ருபூமி நியூஸ் மற்றும் பி-மார்க் இணைந்து கேரளாவில் நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக ஆறு தொகுதிகளின் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டி கடுமையாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.
புதிய சர்வே: இந்த மாத்ருபூமி சர்வேபடி இடுக்கி மற்றும் கோழிக்கோடு தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி தனது தொகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ளும் என கூற்பபட்டுள்ளது. இடுக்கி தொகுதியில் காங்கிரஸின் டீன் குரியகோஸ் 10% வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெறுவார் எனக் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. இருப்பினும், கோழிக்கோட்டில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் தொகுதியைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸ் வேட்பாளர் ஹிபி ஈடன்தனது தொகுதியைத் தக்க வைத்துக் கொள்வார் என்று சர்வே கூறுகிறது. ஆலத்தூர் தொகுதியில் இடதுசாரிகளின் கே ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்றும் திருச்சூரிலும் இடதுசாரிகள் வேட்பாளர் வி.எஸ்.சுனில் குமார் 34% வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அங்கே பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபி கடும் போட்டியைக் கொடுத்தாலும் அவர் மூன்றாம் இடத்தையே பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
எத்தனை சீட்: இடுக்கி லோக்சபா தொகுதியைப் பொறுத்தவரை அங்கே காங்கிரஸின் டீன் குரியகோஸ் 48% வாக்குகளைப் பெறுவார் என கூறப்பட்டுள்ளது. இடதுசாரிகளின் ஜாய்ஸ் ஜார்ஜ் 38% வாக்குகளைப் பெறுவார் என்றும் பிடிஜேஎஸ் வேட்பாளர் சங்கீதா விஸ்வநாதன் 13% வாக்குகளைப் பெறுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
கோழிக்கோடு தொகுதியில் கடும் போட்டி இருந்தாலும் கடைசியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.ராகவன் வெல்வார் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கே காங்கிரஸ் வேட்பாளர் 39% வாக்குகளையும் இடதுசாரிகள் வேட்பாளர் எளமரம் கரீம் 37% வாக்குகளைப் பெறுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. பாஜகவின் எம்.டி.ரமேஷ் வெறும் 22% வாக்குகளை மட்டுமே பெறுவார் என கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ்: எர்ணாகுளத்தில் காங்கிரஸ் வேட்பாளர் 46% வாக்குகளைப் பெறும் நிலையில், இடதுசாரிகள் வேட்பாளர் 33% வாக்குகளை மட்டுமே பெறுவார் என கூறப்பட்டுள்ளது. அங்கே பாஜகவால் 19% வாக்குகளை மட்டுமே பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. பொன்னனி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எம்பி அப்துஸ்ஸமத் சமதானி 47% வாக்குகளைப் பெற்று வெல்வார் என்றும் இடதுசாரிகள் வேட்பாளர் கேஎஸ் ஹம்சாவால் 30% வாக்குகளை மட்டுமே பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.
ஆலத்தூர் என்ற தொகுதியில் கடும் போட்டி இருக்கும் என்றும் அங்கே இடதுசாரிகள் வேட்பாளர் கே ராதாகிருஷ்ணன் 43% பெற்று வெல்வார் என கூறப்படுகிறது. அங்கே காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் ரம்யா ஹரிதாஸ் 42% வாக்குகளை மட்டுமே பெறுவார் என கூறப்பட்டுள்ளது.
கடைசியாக திருச்சூர் தொகுதியைப் பொறுத்தவரை அங்கே மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், அங்கே இடதுசாரிகளின் வி எஸ் சுனில் குமார் அதிகபட்சமாக 34% வாக்குகளைப் பெறுவாராம். தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியின் கே முரளீதரன் 32% பாஜக வேட்பாளரும் நடிகருமான சுரேஷ் கோபி 31% வாக்குகளையும் பெறுவார் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications