கேரளாவில் இளம் பெண்ணிடம் அத்துமீறிய ஓட்டல் ஓனர்.. கோழிக்கோடு வீட்டின் 2வது மாடியில் என்ன நடந்தது?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியில் தேவதாஸ் என்பவர் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் 24 வயது இளம்பெண் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஓட்டல் உரிமையாளர் தேவதாஸ், இளம் பெண்ணிடம் அத்துமீற முயன்றாராம். இதனால் ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து இளம்பெண் கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் உரிமையாளரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் முக்கம் பகுதியில் 42 வயதாகும் தேவதாஸ் என்பவர் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த ஓட்டலில் 24 வயது இளம்பெண் ஒருவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்காக ஓட்டல் அமைந்துள்ள முக்கம் அருகே ஒரு வீட்டின் மாடியில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று ஓட்டல் உரிமையாளர் தேவதாஸ் மற்றும் ஓட்டல் ஊழியர்களான ரியாஸ், சுரேஷ் ஆகிய 3 பேர் இளம்பெண் தங்கி இருந்த வீட்டின் மாடிக்கு சென்றார்களாம்.

அப்போது அங்கு இளம்பெண் தனது செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தாராம். அவர்கள் வந்ததை அறிந்த இளம்பெண், செல்போனில் வீடியோ பதிவாகும் வகையில் வைத்து விட்டு கதவை திறந்துள்ளாராம். அந்த சமயத்தில் தேவதாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததுடன், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தாராம். இதனால் இளம்பெண் பயந்து போனதுடன், ஓட்டல் உரிமையாளரிடம் இருந்து தப்பிக்க, அவரை கீழே தள்ளி விட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்திருக்கிறாராம்.
பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இளம் பெண், கண்ணிமைக்கும் நேரத்தில் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்து வலி தாங்க முடியாமல் துடிதுடித்தார். இதை பார்த்த தேவதாஸ் உள்பட 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிப்போய்விட்டார்கள். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் இளம்பெண்ணை மீட்டு கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த முக்கம் போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தேவதாசை திருச்சூர் அருகே குன்னங்குளம் பகுதியில் போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, பாலியல் அத்துமீறல் என 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த ரியாஸ், சுரேஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து இளம்பெண் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications