EXCLUSIVE: "சாயில் பைப்பிங்" அதிர வைக்குது.. வயநாட்டு கொடூரம் வெறும் தொடக்கம்தான்.. வந்த வார்னிங்!
திருவனந்தபுரம்: வயநாட்டில் மாபெரும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதுவரை அங்கே 155 பேருக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 95 பேர் வரை அடையாளம் காணப்பட்டு உள்ளனர். 200 பேர் வரை படுகாயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்றனர். அங்கே நடந்த இந்த நிலச்சரிவு கொடூரம்.. வெறும் தொடக்கம்தான்.. அங்கே மழை தொடர்ந்தால் இதே சம்பவம் மீண்டும் நடக்கலாம் என்று நம்மிடம் பேசிய வயநாட்டு மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் மக்கள் பலர் சிக்கி உள்ளனர். 1000 பேரை இதுவரை அங்கே காணவில்லை. இது தொடர்பாக நம்மிடம் பேசிய வயநாட்டை சேர்ந்த, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் டிஜூ ஆல்ட்ரின் என்பவர்.. இங்கே சாயில் பைப்பிங் மோசமாக உள்ளது.

மழை விட்டுவிட்டது. ஆனால் 2-3 நாட்களில் மீண்டும் மழை வந்தால்.. மீண்டும் நிலச்சரிவு ஏற்படலாம். மண் வலிமையாக இல்லை. சாயில் பைப்பிங் காரணமாக மண் முழுமையாக வலிமை இழந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் நீர் சேர்ந்தால் மீண்டும் சரிவு ஏற்படும். இந்த பகுதியில் கற்களை குவித்து அதன்பின் அதன் மீது வீடு கட்டினாலும் கூட உள்ளே தண்ணீர் புகுந்து மண் சரியாவே வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வயநாட்டில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுவது ஏன்?: வயநாடு மற்றும் கேரளாவில் மற்ற பகுதிகளில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட சாயில் பைப்பிங் என்ற பிரச்சனைதான் காரணம். அதாவது மணல் குழாய். இப்போது மண்ணிற்கு கீழ் பைப் ஒன்றை வைக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த பைப்பை சுற்றி இருக்கும் மண் பொதுவாக கொஞ்சம் வலிமை இழந்து இருக்கும்.
அதுவே இயற்கையாகவே மண்ணுக்கு அடியில் குழாய் போன்ற அமைப்பை தண்ணீர் மூலம் உருவாகிறது என்று வைத்துகொள்வோம். வலிமை இல்லாத மண் காரணமாக குழாய் போன்ற அமைப்பு மண்ணுக்கு கீழே தண்ணீர் மூலம் உருவாக்கப்பட்டு அதன் வழியாக தண்ணீர் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த தண்ணீர் அந்த மண்ணை மேலும் வலிமை இழக்க செய்து அதை சரிய செய்யும்.
இதுதான் கேரளாவில் நடக்கிறது. அங்கே இருக்கும் மண் வலிமை இன்றி இருக்கிறது. இப்படி மண் வலிமை இன்றி இருப்பதால் தானாக அங்கே மண் உள்ளே தண்ணீர் மூலம் சாயில் பைப் ஏற்படுத்தப்படுகிறது. இது பின்னர் மண் சரிய முக்கிய காரணமாக மாறி விடுகிறது.
அதிர்ச்சி தரும் தகவல்கள்: இது தொடர்பாக வயநாடு சுல்தான் பத்தேரி பகுதிகளில் வசிக்கும் மக்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் நம்மிடம் பேசுகையில், சுல்தான் பத்தேரி ஹெலிபேட் அருகில்தான் கேம்ப் வைத்து இருக்கிறார்கள். மற்றபடி மண் சரிவு ஏற்பட்டது எல்லாம் மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா வட்டாரத்தில்தான் சரிவு ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த 2 -3 நாட்களாவே நல்ல மழை. அப்பவே சின்ன சின்னதாக மணல் சரிவுலாம் இருந்தது சார். இப்போது திடீரென பெரிய சரிவு ஏற்பட்டு உள்ளது. ஒரு 1000 பேர் காணலை.. நாங்க நேரடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு இருக்கோம். ஒவ்வொரு பஞ்சாயத்தில் இருந்தும் பல நூறு பேரு மீட்க போய் இருக்காங்க.
அங்க இருந்த பல வீடுகளை காணோம். மண்ணுக்குள்ள அப்படியே மூழ்கிடுச்சு. இருந்த இடமே தெரியாமல் போயிடுச்சு சார். மீட்க ரொம்ப நேரம் ஆகும். அடுத்த 2-3 நாள் ஆகும்.. உள்ளே போன எல்லாரையும் கொண்டு வர. அதிகாலை 1 மணிக்கு ஒரு டைம்.,. 4 மணிக்கு ஒரு டைம்னு ரெண்டு டைம் மண்ணு விழுந்து இருக்கு. முதல் சரிவில் சிக்குனவங்களை மீட்க போனவர்களும் மாட்டி இருக்காங்க.
2-3 வருஷம் முன்னாடி இதே மாதிரி சரிவு ஏற்பட்டுச்சு. அப்போ ஏற்பட்டதை விட இது மோசமான சரிவு. ரெண்டு டைம் சரிஞ்சு இடத்துல மறுபடியும் வீடுலாம் கட்ட முடியாது.. மண்ணு நிக்காது. ஆனா இங்கே மறுபடியும் சரிஞ்சு இடத்துலே கல்லை கொட்டி வீடு கட்டி இருக்காங்க. அதான் மறுபடியும் சரிஞ்சு இருக்கு. மீட்பு பணியில் பல ஆயிரம் பேர் இருந்தாலும் மழை நிக்கணும்.. சேறு இடம் கொடுக்கணும்.. அப்போதான் உடம்பை எடுக்க முடியும் சார்.. என்று நம்மிடம் தெரிவித்துள்ளனர்.
என்ன நடந்தது?: கனமழை காரணமாக கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று முதல் நாள் இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. அதேபோல் இன்று மீண்டும் அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அதிக வீடுகள் உள்ள பகுதியில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பலர் பலியாகி இருக்கலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 155 பேர் பலியாகி உள்ளனர்..
கிட்டத்தட்ட 400 குடும்பங்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளன. இன்று அதிகாலை மேப்பாடி, முண்டக்காய் டவுன் மற்றும் சூரல் மாலா ஆகிய இடங்களில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவுகளில் குறைந்தது 155 பேர் உயிரிழந்தனர். 400 குடும்பங்கள் கணக்கு வைத்து.. கிட்டத்தட்ட 1000 பேருக்கும் அதிகமானோரை இதுவரை அங்கே காணவில்லை.












Click it and Unblock the Notifications