கேரளா: மிதக்கும் பாலம் உடைந்து 15 பேர் கடலில் விழுந்ததால் பரபரப்பு.. உயிரைக் காத்த லைஃப் ஜாக்கெட்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வர்கலாவில் மிதக்கும் பாலம் உடைந்து 15 பேர் கடலில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரும் உயிர் காக்கும் கவசம் (life jacket) அணிந்திருந்ததால் கடலில் மூழ்காமல் தப்பியுள்ளனர்.
கேரள மாநிலம் வர்கலாவில் கடலில் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த மிதக்கும் பாலம் உடைந்தது. கடலில் அலை அதிகமாக இருந்ததால் பாலம் சேதமடைந்து விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மிதக்கும் பாலத்தில் சென்ற 15 பேர் கடகுக்குள் விழுந்தனர். கடலில் விழுந்த 15 பேரில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர்.

தவறி விழுந்தவர்கள் அனைவரும் உயிர் காக்கும் உடை அணிந்திருந்ததால் கடல் நீரில் மூழ்காமல் மேலே மிதந்தனர். இதையடுத்து உடனடியாக மீட்புப்படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கடலில் இறங்கி 15 பேரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
கடலில் விழுந்தவர்கள் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உப்பு நீரை குடித்ததால் 2 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடற்கரையில் இருந்து கடலுக்குச் செல்லும் மிதக்கும் பாலம் 100 மீட்டர் நீளத்திற்கு அமைந்துள்ளது. 3 மீட்டர் அகலம் கொண்ட இந்த பாலத்தில் சென்று, கடலை நெருக்கமாகப் பார்வையிடலாம். 700 கிலோ எடையில் மிகவும் பலமான பிளாஸ்டிக் பிளாக்குகள் மூலமாக இந்தப் பாலம் அமைக்கப்பட்டது.
இந்த பாலத்தில் செல்பவர்கள் கட்டாயம் லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்க வேண்டும் என்பது விதிமுறை. அதன் காரணமாகவே, பாலம் உடைந்து விழுந்தாலும் 15 பேரும் இன்று கடலில் மூழ்காமல் உயிர் தப்பியுள்ளனர்.
இது குறித்து வர்கலா காவல் நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "மிதக்கும் பாலத்தில் நின்றவர்கள் லைஃப் ஜாக்கெட் அணிந்திருந்ததால், உயிர் சேதம் இன்றி விரைவாகவும், பாதுகாப்பாகவும் கரைக்கு கொண்டு வர முடிந்தது." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications