சபரிமலைக்கு இனி பறந்து செல்லலாம்... ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
திருவனந்தபுரம்: சபரிமலை பக்தர்கள் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். இதே போல், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

ஐயப்ப பக்தர்களின் வருகை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருவதால், பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக நெடுவஞ்சேரி விமான நிலையம் அருகே உள்ள காலடி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்பட்டு உள்ளது.
காலடியில் இருந்து பக்தர்கள் ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் வரை செல்லலாம். இதற்கான பயண நேரம் 35 நிமிடங்கள் ஆகும். இதற்காக காலடியில் இருந்து நிலக்கல்லுக்கும், நிலக்கல்லில் இருந்து காலடிக்கும் தினமும் 6 முறை ஹெலிகாப்டர் சென்று வரும் வகையில் தேவசம்போர்டு ஏற்பாடு செய்து வருகிறது.
காலை 7 மணிக்கு முதல் ஹெலிகாப்டர் பயணம் தொடங்கும் மாலை 4.15 மணியுடன் ஹெலிகாப்டர் சேவை நிறைவடையும். வருகிற நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகள் நடைபெற உள்ளது.
இந்த காலத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கும் விதத்தில் இந்த பணிகள் விரைவாக நடந்து வருகிறது. நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 16-ந்தேதி வரை ஹெலிகாப்டர் சேவை நடைபெறும் விதத்தில் திட்ட மிடப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் பயணம் செய்ய பக்தர்களுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயம் செய்வது என்பது பற்றி தேவசம் போர்டு இன்னும் முடிவு செய்யவில்லை.












Click it and Unblock the Notifications