இதுதாங்க அதிர்ஷ்டம்! "சாயா"வால் வந்த ரூ.10 கோடி.. லாட்டரியால் ஒரே நாளில் கோடீஸ்வரர் பெண் தொழிலாளிகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் பெண் தொழிலாளிகள் 11 பேர் சேர்ந்து வாங்கிய லாட்டரிக்கு பம்பர் பரிசாக 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. 12 ரூபாய் குறைவாக இருந்ததால் கூடுதலாக ஒரு பெண் தொழிலாளியை சேர்த்து லாட்டரி வாங்கியவர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகியுள்ளனர். இது குறித்த விவரத்தை பார்க்கலாம்.
கேரளாவில் லாட்டரி சீட்டுக்களுக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. அரசே லாட்டரிகளை விற்பனை செய்கிறது. இதற்காக லாட்டரித் துறை என்ற தனித்துறையே அங்கு செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் கேரளா தவிர சிக்கிம், பஞ்சாப், அசாம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களிலும் லாட்டரி விற்பனையாகிறது. கேரள லாட்டரிகளை வாங்கி திடீரென கோடிஸ்வரர் ஆகி நாடு முழுக்க பிரபலம் ஆகிவிடுவதை அவ்வப்போது கேள்வி பட்டு இருப்போம்.

அந்த வகையில், கேரளாவில் மக்காத குப்பைகளை வீடு வீடாக சேகரித்து அவற்றை மறு சுழற்சிக்கு அனுப்பும் பணியை மேற்கொள்ளும் Haritha Karma sena குழுவை சேர்ந்த பெண்கள் 11 பேர் கூட்டாக வாங்கிய லாட்டரிக்கு ரூ.10 கோடி பரிசு அடித்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்கடி பகுதியை சேர்ந்த பெண்களுக்கு தான் இந்த ஜாக்பாட் அடித்துள்ளது. வேலைக்கு இடையே டீ குடித்து கொண்டு இருந்த போது லாட்டரி சீட்டு வாங்கினால் என்ன? என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.
இதற்காக ஆளுக்கு கொஞ்சம் காசு போட்டு கூட்டாக வாங்குவோம் என காசை பிரித்து இருக்கிறார்கள். கடைசியில் 12.50 குறைந்துள்ளது. இதனால், 11-வதாக ஒருவரை சேர்த்து அந்த தொகை சேர்ந்ததும் ரூ.250 மதிப்புள்ள லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்கள். இந்த லாட்டரி சீட்டுக்குத்தான் பம்பர் பரிசாக ரூ.10 கோடி விழுந்துள்ளது. லாட்டரி துறை பரிசு விழுந்த எண்ணை அறிவித்த மறுநாள் தான் வெற்றி பெற்றவர்களின் விவரம் தெரியவந்தது.
தூய்மை பணியாளர்கள் 4-வது முறையாக இப்படி லாட்டரி வாங்கியுள்ளார்களாம். ஓணம் பம்பர் லாட்டரியில் ஆயிரம் பரிசுத்தொகை கிடைத்ததாக லாட்டரியை கூட்டாக வாங்கிய பெண்களில் ஒருவரான ராதா என்பவர் தெரிவித்தார். இந்தக் குழுவில் உள்ள மற்றொரு பெண் கூறுகையில், எங்கள் குழுவில் உள்ள 9 பேரும் சேர்ந்து லாட்டரியை வாங்க திட்டமிட்டோம்.
ஆனாலும் பணத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், மேலும் இரண்டு பேரை சேர்த்துக் கொண்டோம். கூட்டாக வாங்கிய இந்த லாட்டரிக்கு விழுந்துள்ள பரிசு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார். மழைக்கால பம்பர் பரிசு லாட்டரியை ரூ. 250க்கு இந்த பெண்கள் வாங்கியுள்ளனர். இந்த லாட்டரிக்கு இரண்டாவது பரிசாக 5 பேருக்கு தலா ரூ.10 லட்சம், மூன்றாவது பரிசாக 5 லட்சம், 4-வது பரிசாக ரூ.3 லட்சம் தலா 5 பேருக்கு அளிக்கப்படும் என்றும் லாட்டரி நிறுவனம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications