இடுக்கி அணை திறப்பால் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் - 3 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்த வானிலை மையம்
இந்திய வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் இடுக்கி, கோட்டயம், கொல்லம், கன்னூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புக்குழுவினர்.
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இடுக்கி, கோட்டயம், கொல்லம், கன்னூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு கூடுதலாக 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கேரளாவில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. கடவுளின் தேசம் என்று வர்ணிக்கப்படும் கேரளாவில் விடாது பெய்து வரும் மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழையால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
கன மழையால் ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. புல்லகாயார் ஆற்றில் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் கரைபுரண்டோடுவதால் ஆற்றங்கரையோரத்தில் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கட்டுமானங்கள் அனைத்தும் சேதமடைந்தன. குடியிருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் காணாமல் போனவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் கூட்டிக்கலில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் 7 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர். இதுவரை அங்கு 13 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலங்களை புதைக்கக் கூட இடமில்லாமல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தொடர் மழையால் சோலையார், பரம்பிக்குளம் அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து இரு அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், சாலகுடி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தினம்திட்டாவில் உள்ள காக்கி அணை திறக்கப்பட்டுள்ளதால் பம்பா ஆற்றில் நீர் மட்டம் 15 சென்டிமீட்டர் உயரத்திற்கு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சபரிமலைக்கு ஐப்பசி மாத பூஜைக்காக பக்தர்கள் வர தடை விதிக்கப்படுவதாக அமைச்சர் கே.ராஜன் அறிவித்தார். சபரிமலைக்கு திங்கட்கிழமை முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இடுக்கி அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு அணை திறக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொட்டும் கனமழை... நிரம்பிய அணைகள் : இடுக்கி அணை திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை
பல்வேறு அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், அணைகளை திறப்பது குறித்து முடிவெடுக்க உயர்மட்ட குழுவை அமைத்து பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். கல்லூரிகளை வரும் 25ஆம் தேதி வரை திறக்க வேண்டாம் என்று பினராயி விஜயன் உத்தரவிட்டுளார். கனமழை வெள்ளம் காரணமாக சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில் மற்றும் பாலக்காடு - நெல்லை விரைவு ரயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டன.
Recommended Video
இதனிடையே, வரும் 20ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மீட்பு பணிகளை விரைவுபடுத்தும் விதமாக இடுக்கி, கோட்டயம், கொல்லம், கன்னூர், பாலக்காடு மாவட்டங்களுக்கு கூடுதலாக 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தபோதும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.