நாட்டின் முதல் கொரோனா நோயாளி- கேரளா மாணவிக்கு மீண்டும் பாதிப்பு- லேசான அறிகுறிகள்- தீவிர கண்காணிப்பு
திருவனந்தபுரம்: இந்தியாவின் முதலாவது கொரோனா நோயாளியான கேரளாவை சேர்ந்த மாணவிக்கு மீண்டும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா பரவல் உலகம் முழுவதும் தொடங்கியது. ஒட்டுமொத்த உலக நாடுகளையும் மிக மோசமாக முடக்கி வரலாறு காணாத உயிரிழப்புகளை கொரோனா தொற்று ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா 3-வது அலை
தற்போது கொரோனா பரவலின் 3-வது அலையை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா 3-வது அலை பரவல் ஏற்கனவே தொடங்கிவிட்டது என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்திய மருத்துவர் சங்கமும் இதேபோல் அடுத்தடுத்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

நாட்டின் முதல் நோயாளி
இந்த நிலையில் நாட்டின் முதலாவது கொரோனா நோயாளியான கேரளா திருச்சூரை சேர்ந்த 21 வயது மாணவிக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாணவி சீனாவின் வூஹானில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30-ந் தேதி நாடு திரும்பினார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது

மீண்டும் கொரோனா பாதிப்பு
இதனையடுத்து சுமார் 1 மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் அந்த மாணவி. ஒரு மாத சிகிச்சையைத் தொடர்ந்து அம்மாணவி குணமடைந்தார். தற்போது டெல்லி பயணம் மேற்கொள்ள அம்மாணவி திட்டமிட்டிருந்தார்.

மருத்துவர்கள் கண்காணிப்பு
இதற்காக கொரோனா பரிசோதனைகளை அவர் மேற்கொண்டார். ஆன்டிஜன் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என கூறப்பட்டது. ஆனால் ஆர்டி பிசிஆர் சோதனையில் லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருச்சூர் மாவட்ட மருத்துவர்கள் அந்த மாணவியை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications