அச்சம் தேவையில்லை.. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்- கட்டுப்பாடுகள் அமல் ? சபரிமலை யாத்திரை?
திருவனந்தபுரம்: இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் திடீரென கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு, மரணங்களால் அச்சப்பட தேவையில்லை என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளாவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
உலக நாடுகளில் சிலவற்றில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு, ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பது கேரளாவில் மட்டும்தான் என்கின்றன மத்திய அரசின் புள்ளி விவரங்கள்.

ஒப்பீட்டு அளவில் இந்தியாவின் 90% புதிய கொரோனா பாதிப்புகள் கேரளாவில்தான் பதிவாகி இருக்கின்றன. இந்தியாவில் தற்போது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 1296. கேரளா மாநிலத்தில் நவம்பர் மாதத்தில் மொத்தமே 470 கொரோனா பாதிப்புகள் பதிவாகின. ஆனால் தற்போதைய டிசம்பர் மாத தொடக்க 2 வாரங்களிலேயே இந்த பாதிப்பு எண்ணிக்கை 800ஐ கடந்தது.
கேரளாவில் தற்போது சபரிமலை யாத்திரைக்காக பல லட்சம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த கூட்ட நெரிசலில் கொரோனா பரவாமல் தடுக்கவும் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த கொரோனா பாதிப்பு மிக அபாயகரமானது இல்லை; பொதுமக்கள் அச்சப்படவும் தேவை இல்லை எனவும் வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதே நேரத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துமா? அப்படியானால் தற்போதைய சபரிமலை யாத்திரையை எப்படி கேரளா அரசு ஒழுங்கு செய்யும் என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளன.

கேரளாவில் கடந்த காலங்களை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் குவிந்துள்ளனர். ஒருநாளைக்கு சுமார் 1 லட்சம் வரையில் பக்தர்கள் ஐயப்பனை தரிசக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பக்தர்களின் அலைமோதும் கூட்டத்தை எதிர்பார்க்காத தேவசம் போர்டு நிர்வாகம் கடுமையாக திணறி வருவது அம்மாநிலத்தில் சர்ச்சையாகவும் வெடித்துள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சமும் சபரிமலை ஐயப்ப பக்தர்களை கலக்கமடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications