14 வருடம்.. ஒரே குடும்பத்தில் 6 கொலை.. கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் மர்டர்.. பின்னணியில் ஒரு பெண்
கேரளாவில் சொத்துக்களை அபகரிப்பதற்காக பெண் ஒருவர் தன் குடும்பத்தில் இருந்தவர்களை சூப் வைத்து கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: கேரளாவில் சொத்துக்களை அபகரிப்பதற்காக பெண் ஒருவர் தன் குடும்பத்தில் இருந்தவர்களை சூப் வைத்து கொலை செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் தற்போது மட்டன் சூப் மர்டர் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜூலி தாமஸ். இவர் 16 வருடங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த ராய் தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ராய் தாமஸ் பல கோடி சொத்துக்களை கொண்டவர். அவரின் பெயரில் அந்த குடும்பத்தில் நிறைய சொத்துக்கள் இருந்துள்ளது.
எப்படி மோசம்
அதே சமயம் ராய் தாமஸ் மற்றும் ஜூலி தாமஸ் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்த சண்டை காரணமாக அடிக்கடி தன்னுடைய சொந்த வீட்டிற்கு சென்று ஜூலி தங்கி இருக்கிறார். இது இல்லாமல் ஜூலிக்கும் அவரின் கணவர் ராய் தாமஸின் பெரியப்பா மகன் சாஜுவிற்கும் காதல் ஏற்பட்டுள்ளது.
என்ன திட்டம்
இதனால் வீட்டில் இருக்கும் பெரிய நபர்களை கொன்றுவிட்டு, மொத்தமாக சொத்துக்களை அபகரிக்கலாம், அதன்பின் திருமணமும் செய்து கொள்ளலாம் என்று ஜூலி தாமஸ் மற்றும் சாஜு இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் மொத்தமாக எல்லோரையும் கொன்றால் பிரச்சனையாகிவிடும் என்று ஜூலி தாமஸ் வரிசையாக ஒவ்வொருவரையும் தனி தனியாக கொல்ல முடிவெடுத்துள்ளார்.
எப்படி நடந்தது
அந்த வகையில் ஜூலி தாமஸ் தனது மாமியார் அன்னம்மாவிற்கு 2002ல் மட்டன் சூப்பில் சயனைடு கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். அதற்கு அடுத்து 2008ம் ஆண்டு தனது மாமனார் டாம் தாமஸை அதேபோல் சயனைடு கலந்த சூப் கொடுத்து கொன்றுள்ளார். 2011ம் ஆண்டு இதேபோல் தனது கணவர் ராய் தாமஸையும் கொன்றுள்ளார்.
அடுத்து என்ன
இந்த தொடர் மரணத்தால் சந்தேகம் அடைந்த ஜூலி தாமஸின் மாமியார் அன்னம்மாவின் சகோதரர் மேத்யூ போலீசில் புகார் அளித்தார். இது தெரிந்து 2014ம் ஆண்டு மேத்யூவிற்கும் சயனைடு சூப் கொடுத்து ஜூலி தாமஸ் கொலை செய்துள்ளார். அவரின் கதையையும் முடித்ததால் ஜூலியின் சிக்கல் தீர்ந்தது.
என்ன சொத்து
இதையடுத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் எல்லா சொத்துக்களையும் தன்னுடைய பெயருக்கு ஜூலி தாமஸ் மாற்றி உள்ளார். அதோடு இல்லாமல் ஜூலி தாமஸ் தனது காதலர் சாஜுவின் மனைவி சிலி மற்றும் அவரது குழந்தைகளை இதேபோல் 2016ல் சயனைடு சூப் கொடுத்து கொன்றுள்ளார்.
என்ன திருமணம்
இதையடுத்து 2017ல் ஜூலி தாமஸ் மற்றும் சாஜு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர் குடும்பத்தில் மிஞ்சிய ஒரே ஆள் என்றால் அது ஜூலியின் முன்னாள் கணவர் ராய் தாமஸின் தம்பி மட்டும்தான். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். இந்தியா திரும்பிய அவர் உடனடியாக போலீசில் புகார் அளித்தார்.
என்ன விசாரணை
அதேபோல் சாஜுவின் முன்னாள் மனைவியின் குடும்ப ஆட்களும் போலீசில் புகார் அளித்தனர். இந்த விசாரணையின் போது ஜூலி தாமஸ் தான் சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்று 6 பேரையும் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இதனால் உடனடியாக இந்த 6 பேரின் உடலையும் போலீசார் தோண்டி எடுத்தனர்.
கைது செய்தனர்
இதில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் இவர்கள் சயனைடு கொடுத்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. மட்டன் சூப்பில் சையனைடு கலந்து கொடுத்து கொன்றதாக ஜூலி தாமஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் ஜூலி தாமஸ் மற்றும் சாஜு, இவர்களுக்கு உடைந்தையாக இருந்த ஊழியர் ஆகியோரை கைது செய்தனர்.