"அமானுஷ்யம்.." முதலில் பெண்கள் நரபலி.. இப்போது குழந்தைகள்! திடீரென மயங்கிய சிறுமி! கேரளாவில் பரபர
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நரபலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அடுத்து மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
தென்னிந்தியாவையே உலுக்கும் வகையில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. கேரளாவில் மூடநம்பிக்கையால் நரபலி கொடுக்கப்பட்டு இரு உயிர்கள் அநியாயமாகப் பறிபோய் உள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இப்போது கேரளா பிளாக் மேஜிக் குறித்து மற்றொரு வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

கேரளா
தருமபுரி பகுதியைச் சேர்ந்த பத்மா சில ஆண்டுகளாகவே கேரளா கொச்சியில் வசித்து வந்தார். அங்கு கடவந்திரா என்ற பகுதியில் லாட்டரி விற்று வந்த இவர், கடந்த மாதம் 26ஆம் தேதி திடீரென மாயமானர். இது தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரில் கொச்சி போலீசார் விசாரணை நடத்தினர். முன்னதாக ஏற்கனவே, ரோஸ்லின் (50) என்பவரும் இதேபோலத் தான் கடந்த ஜூன் மாயமாகி இருந்தார். இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நரபலி
இருவரது செல்போனும் கடைசியாகத் திருவல்லா என்ற பகுதியில் தான் கடைசியாக இருந்து உள்ளது. அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களையும் வைத்து போலீசார் தீவிர விசாரணையை நடத்தினர். அதில் பகவத் சிங், அவரது மனைவி லைலா சிங், முகமது ஷபி ஆகியோர் சேர்ந்த பெண்களை நரபலி கொடுத்தது தெரிய வந்தது. கொலைக்கு முன்பு, பெண்களை டார்ச்சரும் செய்து உள்ளனர்.

கைது
இந்தச் சம்பவரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் இரு பெண்களை நரபலி கொடுத்ததை ஒப்புக் கொண்டு உள்ளனர். அதேநேரம் இவர்கள் இந்த இரு பெண்களை மட்டும் தான் நரபலி கொடுத்து உள்ளனரா இல்லை. இதேபோல பல பெண்களை நரபலி கொடுத்து இருக்கிறார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் குழந்தை
இதனிடையே கேரளாவில் குழந்தைகளைப் பயன்படுத்தி நடக்கும் மற்றொரு பிளாக் மேஜிக் தொடர்பான சம்பவம் குறித்த தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் குழந்தைகளைப் பயன்படுத்தி அமானுஷ்ய மந்திரங்களைச் செய்யும் பழக்கம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற அமானுஷ்ய நிகழ்வில் இருந்த போது குழந்தை ஒன்று திடீரென மயங்கி விழுந்து உள்ளது.

அடுத்த அதிர்ச்சி
இது தொடர்பாகப் பெண் மந்திரவாதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளார். கேரளா பத்தனம்திட்டாவில் மலையாளப்புழா நகரில் வசித்து வருபவர் வசந்தி என்ற ஷோபனா. இவர் அங்கு பிளாக் மேஜிக் குகளை செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் மேற்கொண்ட அமானுஷ்ய மந்திரவாதத்தில் குழந்தை ஒன்றைப் பயன்படுத்தி உள்ளார். அப்போது அந்த குழந்தை திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மிரட்டல்
குழந்தை திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். தன்னை எதிர்க்கும் நபர்களுக்குச் சூனியம் வைப்பேன் என்றும் அந்த பெண் மந்திரவாதி அவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

பிளாக் மேஜிக்
பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்ததால் போலீசார் பெண் மந்திரவாதி ஷோபனாவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருவதாகவும் குழந்தைகளை பிளாக் மேஜிக்குகளுக்கு பயன்படுத்தியது குறித்து அவரிடம் முழு விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தனர். கேரளாவில் நரபலி விவகாரமே இன்னும் முடியாத நிலையில், இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications