அதானி குழுமத்துக்கு திருவனந்தபுரம் விமான நிலையம்-எதிர்ப்பு தெரிவித்து கேரளா சட்டசபை அதிரடி தீர்மானம்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா சட்டசபையில் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசு நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் திருவனந்தபுரம் உள்ளிட்ட 3 விமான நிலையங்களை அதானி குழுமத்துக்கு குத்தகை கொடுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

அதானி குழுமத்துக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தை 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுக்கும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு கேரளா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. கேரளாவில் கடந்த 20-ந் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்ப்பது என ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளா சட்டசபையின் ஒருநாள் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தங்கக் கடத்தலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவதால் சபாநாயகர் பி ஶ்ரீராமகிருஷ்ணனை நீக்க கோரி காங்கிரஸ் தீர்மான நோட்டீஸ் கொடுத்தது. இதனை சபாநாயகர் ஶ்ரீராமகிருஷ்ணன் நிராகரித்தார்.
இதனையடுத்து திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்துக்கு குத்தகை விடும் மத்திய அரசின் முடிவுக்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதங்களுக்குப் பின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications