பெண் பத்திரிகையாளருக்கு மீண்டும், மீண்டும் ஆபாச ஸ்டிக்கர்: ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு
பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு ஆபாச ஸ்டிக்கரை வாட்ஸ் அப்பில் அனுப்பிய கேரளா ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: கேரளாவில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆபாச செய்தி அனுப்பிய ஐஏஎஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி அனுப்பிய படத்தின் ஸ்க்ரீன் ஷாட்களும் தற்போது வைரலாகியுள்ளன.
சர்ச்சையில் சிக்கியுள்ள ஐஏஎஸ் அதிகாரியின் பெயர் பிரகாஷ் என்பதாகும். இவர் கேரள படகு மற்றும் இன்லாண்ட் நேவிகேஷன் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராக இருந்து வந்துள்ளார். பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஆழ்கடல் மீன்பிடித்தல் தொடர்பாக அமெரிக்க நிறுவனத்துடன் இந்த ஆண்டு துவக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சர்ச்சைக்குரிய இந்த ஒப்பந்தம் குறித்து பினராயி விஜயன் அரசின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பெண் பத்திரிகையாளர் ஒருவர் இந்த சர்ச்சைக்கு பதில் கேட்டு ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த்தை அலுவல் ரீதியாக அணுகினார். போனில் அழைத்தபோது அவர் பதிலளிக்காத காரணத்தால் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
வாட்ஸ் அப்பில் தன்னை ஒரு பத்திரிகையாளர் என அறிமுகப்படுத்தி கொண்ட செய்தியாளர், புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றிய செய்தியைப் பற்றி பேசுவதற்கு சரியான நேரமா? உங்கள் கருத்து என்ன என கேட்டார்.
அதற்கு ஐஏஎஸ் அதிகாரி பிரசாந்த் வெறும் ஸ்டிக்கரை அவருக்கு ரிப்ளை செய்துள்ளார். அதற்கு அந்த செய்தியாளர், இந்த கேள்வி உங்களை காயப்படுத்துவதற்காக அல்ல, சர்ச்சை குறித்து பதிலளிக்க முடியுமா என பத்திரிகையாளர் மீண்டும் கேட்டுள்ளார்.
அப்போது ஆபாசமான ஸ்டிக்கரை பதிலாக அனுப்பியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி. அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளார் என்னவிதமான ஸ்டிக்கர் இது என கேள்வியெழுப்பியபோது மற்றொரு ஆபாசமான ஸ்டிக்கரை பதிலாக அனுப்பியுள்ளார். அது அந்த பெண் பத்திரிகையாளரை கடுமையாக பாதித்தது. இதனைத் தொடர்ந்து, கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் முதல்வர் பினராயி விஜயனிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
ஐஏஎஸ் அதிகாரியின் செயலுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து தற்போது பெண்களுக்கு எதிராக, அவர்களின் பெண்மையை களங்கப்படுத்தும் வகையில் பொது இடங்களில் பெண்களை ஆபாசமாக திட்டுதல், மொபைல் போன் வழியாக ஆபாச படங்களையும், செய்திகளையும் பதிவிடுதலுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 509 -ன் கீழ் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தகுந்த சட்ட ஆலோசனை பெற்ற பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications