Kerala: ”தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்” கிணற்றில் தவறி விழுந்த குழந்தை! யோசிக்காமல் தந்தை செய்த காரியம்
திருவனந்தபுரம் (Kerala): "தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே..." என்ற வரிகளுக்கு ஏற்றாற் போல கேரளாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. பிள்ளைக்கு ஒன்று என்றால் உடனே தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றுவார்கள். அப்படித்தான், கோட்டயம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 2 வயது குழந்தையை, அடுத்த நொடியே கிணற்றில் குதித்து குழந்தையை மூழ்க விடாமல் தடுத்து காப்பாற்றினார் அந்த தந்தை.
"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.. தந்தை அன்பின் முன்னே" என்ற வரிகளுக்கு ஏற்றாற் போல கேரளாவில் நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்த பிள்ளை கிணற்றில் தவறி விழுந்த அடுத்த நொடியே தானும் கிணற்றில் குதித்து காப்பாற்றிய சம்பவம் நடைபெற்றுள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-

கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை
கேரள மாநிலம் கோட்டயம் கடுதுருத்தி மாத்தூரை சேர்ந்தவர் சிரில். இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் சொந்த ஊருக்கு திரும்பிய அவர், நேற்று முன்தினம் தனது மகள் லெனட் (வயது 2), மாமனார் சிரியக் ஆகியோருடன் வாடகைக்கு வீடு பார்க்க திருவல்லா சென்றார். அங்கு ஜெரின் என்பவருடைய வீட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது வீட்டு முற்றத்தில் விளையாடிய குழந்தை லெனட், அருகில் இருந்த கைப்பிடி இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த சிரில், சற்றும் யோசிக்காமல் கிணற்றில் குதித்து தண்ணீரில் மூழ்கிய மகளை காப்பாற்றினார். பழமையான குறுகிய கிணறாக இருந்ததால் இருவரும் மேலே வர முடியாமல் தவித்தனர்.
தந்தையின் துரிதமான நடவடிக்கையால்
இதனைத் தொடர்ந்து திருவல்லா தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து, கிணற்றுக்குள் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த தந்தை, மகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கிணற்றுக்குள் ஏணிப்படி மூலம் இறங்கி, வலையைத் தொட்டி பயன்படுத்தி இருவரையும் மீட்டனர். தந்தையின் துரிதமான செயல்பாட்டால் 2 வயது பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
இது தொடர்பான காட்சிகள் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குழந்தைக்கு ஒரு ஆபத்து என்றதும் தன் உயிரைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் கிணற்றில் குதித்து மகளை காப்பாற்றிய தந்தை சிரிலின் செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
நெட்டிசன்கள் பாராட்டு
"தாய் பிள்ளையை வயிற்றில் சுமந்தார் என்றால், தந்தை வாழ்நாள் முழுவதும் நெஞ்சில் சுமப்பார்" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்து இருப்பதாக நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில், குழந்தைகளை புதிய இடத்திற்கு அழைத்து செல்லும் போது எப்போதும் கவனமாக வைத்து இருக்க வேண்டும் என்று சில நெட்டிசன்கள் அறிவுரையும் கூறி பதிவிட்டுள்ளனர்.
நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "விவரம் தெரியாத குழந்தைகளுக்கு புதிய இடத்தை பார்த்ததும் உற்சாகத்தில் அங்கும் இங்கும் ஓடி விளையாட பார்க்கும். எனவே, புதிய இடங்களில் எங்கு ஆபத்து இருக்காது என்று பெற்றோர்களுக்கே தெரியாது என்பதால் மிகவும் உஷாராக பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று அட்வைஸ் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications