சபரிமலை போறீங்களா? ஆன்லைன் பதிவு கட்டாயம்.. மண்டல - மகர விளக்கு சீசனையொட்டி முக்கிய அறிவிப்பு
திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு காலத்தில் தரிசனம் செய்ய போகும் பக்தர்களுக்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தினமும் ஆன்லைனில் முன்பதிவு செய்த 80,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் பினராயி விஜய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் பிரசித்திப்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.

குறிப்பாக கார்த்திகை மாதத்தில் வரும் மண்டலகால பூஜை, மகரவிளக்கு பூஜைகளுக்கு ஐயப்ப சாமி பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் கடைப்பிடித்து கோவிலுக்கு சென்று வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் சாமி கோவிலில் மண்டலகால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது.
இதற்காக நவம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்ட உள்ளது. இந்நிலையில் தான் மண்டலகால பூஜை ஏற்பாடுகள், முன்னேற்பாடுகள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில் சபரிமலை கோவில் நிர்வாகத்தினர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பக்தர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய ஏற்பாடுகள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
திருப்பதியில் ரத்தாகும் விஐபி தரிசனம்? லட்டு சர்ச்சைக்கு நடுவே சந்திரபாபு நாயுடுவின் முக்கிய முடிவு
கடந்த ஆண்டு ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை மனதில் வைத்தே முன்கூட்டியே பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய கேரளா உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுவுக்கும் உத்தரவிட்டு இருந்த நிலையில் நாள்தோறும் எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது? கூட்ட நெரிசல் இன்றி பக்தர்களை தரிசனம் செய்ய வைப்பது எப்படி? என்பது பற்றி முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி வரும் மண்டல காலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு ‛ஸ்பாட்’ புக்கிங் முறையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முறை அதற்கு அனுமதியில்லை. முன்கூட்டியே ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களே மட்டுமே அனுமதிக்க வேண்டும். மேலும் நாள்தோறும் 80,000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவின்போதே பக்தர்கள் செல்லும் வழியை தேர்வு செய்து கொள்ளவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நிலக்கல், எருமேலியில் கூடுதல் வாகனங்களை நிறுத்த வசதி செய்ய வேண்டும். மேலும் ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதனை செய்யாமல் செய்யும் பக்தர்கள் நிலக்கல், எருமேலி சென்றும் சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாமல் வீடு திரும்பும் சூழல் ஏற்படும். இதனால் சபரிமலை செல்லும் பக்தர்கள் உரிய முறையில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications