"ராஜ் பவனை கட்டுப்படுத்த நினைத்தால்.. அது ஒருபோதும் நடக்காது.."உச்சத்தில் கேரள அரசு vs ஆளுநர் மோதல்
திருவனந்தபுரம்: கேரள அரசுக்கும் அம்மாநில ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வரும் நிலையில், கேரள அரசு குறித்து ஆளுநர் ஆரிப் முகமது கான் விமர்சித்துள்ளார்.
நாட்டில் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அம்மாநில ஆளுநர்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாகத் தமிழகம், கேரளா. மேற்கு வங்கத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகளை மாநில அரசுகள் விமர்சித்து வருகின்றன.
இந்தச் சூழலில் கேரள அரசு, ராஜ்பவனைக் கட்டுப்படுத்த முயல்வதாகச் சாடியுள்ள அம்மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான், அமைச்சர்களின் தனிப்பட்ட ஊழியர்களின் நியமனம் குறித்தும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்
டெல்லி புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், "நாட்டில் எந்தவொரு மாநிலத்திலும் அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்களாக நியமிக்கப்படும் நபர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படுவதில்லை. ஆனால், கேரளாவில், அவர்கள் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினாலே அவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படுகிறது. இவர்கள் வெறும் 2 ஆண்டுகள் மட்டும் பணியாற்றிவிட்டு ராஜினாமா செய்துவிடுகிறார்கள். இதனால், அவர்களுக்கு ஆயுள் முழுக்க ஓய்வூதியம் தர வேண்டி உள்ளது. இது அரசுக்கு தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துகிறது.

எனது பொறுப்பு
நாட்டின் பிற மாநிலங்களில் ஆயுள் முழுக்க பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால், கேரளாவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினாலே ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்படுகிறது. இது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது. இந்த முறையை நீக்க வேண்டும் எனக் கேரள முதல்வருக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். கேரள மக்களின் வரிப் பணம் தவறாக முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. நான் இங்கு அரசை நடத்த வரவில்லை. ஆனால், அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு இணங்க அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு எனக்கு உள்ளது.

கட்டுப்படுத்த முடியாது
ராஜ்பவன் ஊழியர்கள் மூலம் ராஜ்பவனை மறைமுகமாகக் கட்டுப்படுத்த கேரள அரசு முயன்றால் அதை ஒருபோதும் ஏற்கமாட்டேன். ஆளுநர் மாளிகையைக் கேரள அரசால் கட்டுப்படுத்த முடியாது. கேரள அரசிடம் இருந்து எனக்குச் சர்ச்சைக்குரிய வகையில் கடிதம் ஒன்று வந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் அரசியலமைப்பு நெருக்கடியை நோக்கிச் செல்வோம் எனக் கேரள முதல்வருக்குத் தெரிவித்தனர். இதையடுத்து கேரள அரசு கே.ஆர்.ஜோதிலாலை செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால் கே.ஆர்.ஜோதிலால் அரசு ஆலோசனைப்படியே செயல்பட்டார்" என்றார்.

ஆளுநர் மாளிகையில் முன்னாள் பாஜக நிர்வாகி
பாஜக மாநில நிர்வாகியாக இருந்த ஹரி எஸ் கர்தாவை கூடுதல் தனிப்பட்ட உதவியாளராக ஆளுநர் நியமனம் செய்ததற்குக் கேரள அரசு அதிருப்தி தெரிவித்து. இது குறித்து கேரள ஆளுநர் கூறுகையில், "ஹரி எஸ் கர்தா அரசியலில் ஆக்டிவாக இல்லாமல் இருந்தார். இது மட்டுமின்றி அவரை எனது உதவியாளராக நியமிக்கும் முன்பு, கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டார். மேலும், கேரள போலீசின் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அறிக்கை பெற்ற பின்னரே அவரை நியமித்தேன்.

எதிர்க்கட்சி மீதும் அட்டாக்
இங்கு சில முன்னாள் அமைச்சர்கள் இப்போது சும்மா இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வரின் கவனம் தேவைப்படுகிறது. அதனால் தான் அவர்களும் என்னை விமர்சித்து வருகின்றனர். அதேபோல கேரள எதிர்க்கட்சி தலைவரும் பொறுப்பில்லாமல் என்னைப் பற்றி விமர்சிக்கிறார். உம்மன் சாண்டி போன்ற மூத்த தலைவர்களிடம் இருந்து அவர் நிறை கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்கள் நியமனம் தொடர்பான ஆளுநரின் கருத்தைக் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே சுதாகரன் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications