நவம்பர் 1 முதல் கேரளாவில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க முடிவு
திருவனந்தபுரம்: கேரளாவில் நவம்பர் 1-ந் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளைத் திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருக்கும் மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,000 ஆக இருந்தது.
தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. ஒருநாள் கொரோனா பாதிப்பு 19,325 ஆக உள்ளது. 27,266 பேர் நேற்று கொரோனா பிடியில் இருந்து குணமடைந்தனர்.

இதனையடுத்து கேரளாவில் அனைத்து பள்ளிகளையும் திறப்பது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது நவம்பர் 1-ந் தேதி முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது நவம்பர் 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்புகள் மற்றும் 10,12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதர வகுப்புகள் நவம்பர் 15-ந் தேதி முதல் தொடங்கும்.
அடுத்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதும் 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பள்ளிகளை திறந்த உடன் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து மருத்துவ வல்லுநர்களும் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு சிறப்பு முக கவசம் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி வகுப்புகளில் மாணவர்களை அமரச் செய்ய வேண்டும். பள்ளி மாணவர்களை இடைவெளி விட்டு வகுப்புகளில் அமருவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications