ஏற்கனவே திருமணமான பெண்ணை.. மணந்து கொள்வதாக கூறி கள்ள உறவில் இருப்பது பலாத்காரம் இல்லை! கேரள ஐகோர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்கவே திருமணமான பெண் தனது காதலன் மீது தொடர்ந்த பலாத்கார வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்து உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில் தான் கேரளா ஐகோர்ட் பரபர உத்தரவைப் பிறப்பித்து உள்ளது. அங்குள்ள பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.
இதற்கிடையே இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, உடலுறவு கொண்டுள்ளார். இருப்பினும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி உள்ளார்.

வழக்கு
இது குறித்து அந்த பெண் சம்மந்தப்பட்ட நபர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். இது தொடர்பான வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், அதில் தான் நீதிபதி பரபர உத்தரவைப் பிறப்பித்து உள்ளார். அதாவது ஏற்கனவே திருமணமான பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஒருமித்த உறவில் ஈடுபடுவதைப் பலாத்காரமாகக் கருத முடியாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், கொல்லத்தைச் சேர்ந்த இளைஞன் மீதான பலாத்கார வழக்கையும் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது.

புகார்
கணவரை விட்டுப் பிரிந்து தனியாக இருக்கும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பல முறை இந்தியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அந்த நபர் பலமுறை பலாத்காரம் செய்ததாகவே வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாகப் பல முறை அந்த நபர் அளித்த வாக்குறுதியை நம்பி பாலியல் உறவுக்குச் சம்மதித்ததாக அந்த பெண் கூறினார். இதைக் குறிப்பிட்ட கேரள உயர் நீதிமன்றம், இருவரின் சம்மதத்துடனேயே உடலுறவு நடந்துள்ளது உறுதியாவதாகத் தெரிவித்தனர்.

கேரளா ஐகோர்ட்
நீதிமன்றம் மேலும் கூறுகையில், "பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வேண்டுமென்றே கூறி, உடலுறவுக்கு ஒப்புதல் பெற்றால் மட்டுமே ஐபிசியின் 376-வது பிரிவின் கீழ் குற்றமாகக் கருத முடியும். இந்த வழக்கில் புகார் அளித்தவர் ஏற்கனவே திருமணமான பெண் என்பதால் மேற்கூறிய விவகாரம் இதில் பொருந்தாது. அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவரை சட்டப்பூர்வமான முறையில் திருமணம் செய்து கொள்ள முடியாது என்பது அந்த பெண் நன்கு அறிந்தே உள்ளார்.

பலாத்காரம் இல்லை
இதையும் தாண்டியே அந்த பெண் தனது காதலனுடன் தானாக முன்வந்து உடலுறவு கொண்டார். காதலன் கொடுத்த வாக்குறுதி சட்டவிரோதமானது என்று தெரிந்தும் இது நடந்துள்ளது. எனவே இதை ஐபிசியின் 376 பிரிவின் கீழ் வழக்குத் தொடர காரணமாக இருக்க முடியாது. எனவே, இதைத் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உடலுறவு கொண்டதாகக் கருத முடியாது. இந்த விவகாரத்தில் மோசடி நடந்ததாகவும் கூற முடியாது" என்று கூறி குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான பலாத்கார வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

விவகாரத்து முடியவில்லை
வழக்கு தொடர்ந்த அந்த பெண் தனது கணவரை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அந்த பெண்ணுக்கும் கணவருக்கும் இடையே விவகாரத்து வழக்கு நடந்து வருகிறது. இருந்த போதிலும், அவர்களுக்கு இன்னும் விவகாரத்து கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே இந்த வழக்கில் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றுவது பொருந்தாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

மற்றொரு வழக்கு
முன்னதாக கடந்த மாதம் இதே போன்ற ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் ஆணு ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்தும், அவர் திருமணம் செய்து கொள்வதாகக் கூறும் வாக்குறுதியை நம்பி உடல் உறவு கொண்டால் அதைப் பலாத்காரமாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் கூறி இருந்தது. அந்தச் சம்பவத்தில் 33 வயதான நபர் மீதான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications