கேரளாவின் புது சுகாதாரத்துறை அமைச்சர்.. சைலஜாவின் இடத்தை நிரப்பும் வீணா ஜார்ஜ்.. பினராயி அறிவிப்பு!
திருவனந்தபுரம்: கேரளாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக சிபிஎம் கட்சியின் வீணா ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி எல்டிஎப் கூட்டணி அரசு மே 20ம் தேதி மீண்டும் பதவி ஏற்க உள்ளது. இந்த நிலையில் சிபிஎம் கட்சி சார்பாக பதவி ஏற்க உள்ள அமைச்சர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இதில் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜாவிற்கு முதல்வர் பினராயி விஜயனின் தலைமையிலான எல்டிஎப் அரசில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தேர்வு
இந்த நிலையில் கேரளாவில் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக சிபிஎம் கட்சியின் வீணா ஜார்ஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சைலஜாவை அமைச்சரவையில் இருந்து நீக்கியது கேரளா முழுக்க பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. தேசிய அளவிலும் பலர் இதை விமர்சனம் செய்து இருந்தனர்.

முடிவு
இந்த நிலையில் சைலஜாவின் இடத்தில் இன்னொரு பெண் எம்எல்ஏ வீணா ஜார்ஜை தற்போது முதல்வர் பினராயி விஜயன் நியமித்துள்ளார். முதல்முறையாக இவர் அமைச்சராக தேர்வாகி உள்ளார். மருத்துவ, சுகாதாரத்துறையில் வீணா ஜார்ஜுக்கு பெரிய அனுபவம் இல்லை என்றாலும் கேரளாவை குறித்தும் அதன் ஒவ்வொரு மாவட்டங்கள் குறித்தும் நுணுக்கமான அறிவு கொண்டவர் வீணா ஜார்ஜ்.

44 வயது
44 வயதாகும் வீணா ஜார்ஜ் இதற்கு முன் பத்திரிக்கை துறையில் இருந்தார். 16 வருடங்கள் செய்தியாளராக இருந்தார். மலையாளத்தின் கைரளி, மனோரமா, இந்தியாவிஷன், நியூ டிவி என்று பல சேனல்களில் முக்கிய பொறுப்பில் வீணா ஜார்ஜ் இருந்துள்ளார். அப்போதே இவரின் பணிகள் பெரிய அளவில் கவனிக்கப்பட்டன. அரசியல் தொடர்பு காரணமாக சிபிஎம் கட்சிக்கு வந்தவர் 2016 கேரள சட்டசபை தேர்தலில் அரண்முல தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2019
அப்போது இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. எம்எல்ஏவாக இருக்கும் போதே 2019 லோக்சபா தேர்தலில் சிபிஎம் சார்பாக போட்டியிட்டு பத்தினம்திட்டாவில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் மீண்டும் 2021ல் கேரள சட்டசபை தேர்தலில் அரண்முல தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து தற்போது இவருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முதல்முறை
முதல்முறை அமைச்சராகும் வீணா ஜார்ஜுக்கு சுகாதாரத்துறை என்ற முக்கிய இலாக்கா வழங்கப்பட்டுள்ளது. அதிலும் கேரளாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்கும் நிலையில், இரண்டாம் அலை உச்சத்தில் இருக்கும் போது இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சைலஜா மிக சிறப்பாக சுகாதாரத்துறையை கவனித்துவிட்டு சென்று இருக்கும் நிலையில் வீணா ஜார்ஜுக்கு இது பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications