Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வழிகாட்டும் கேரளா! சொந்த இணையசேவை நிறுவனம் தொடக்கம்! வீடுகள் தோறும் இண்டர்நெட்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நாட்டிலேயே கேரளா மாநிலம் தமது மாநில சேவைகளுக்கான, மக்களுக்காக சொந்தமான இணைய சேவையைப் பெற்றுள்ளது. கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்,' அல்லது கே ஃபோன் என்கிற இந்த திட்டமான இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் தொடக்க விழாவில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரை:

கேரளா ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்,' அல்லது 'கே ஃபோன்', கேரளாவில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதிகளை வழங்கும் திட்டமாகும். கேஃபோன் மூலம், மாநிலத்தின் பொருளாதாரத்தில் பின்தங்கிய சுமார் 20 லட்சம் குடும்பங்களுக்கு அதிவேக இணைய வசதி இலவசமாகவும் மற்றவர்களுக்கு மிதமான விலையிலும் வழங்கப்படுகிறது.

 Kerala launches state owned KFON to offer high speed internet for all households

கே ஃபோன் திட்டத்தின் ஒரு பகுதியாக அடிப்படை சேவைகளை வழங்க வகை 1 உரிமத்தையும் அதிகாரப்பூர்வமாக இணைய சேவைகளை வழங்குவதற்கான இணைய சேவை வழங்குநர் (ஐஎஸ்பி) வகை பி ஒருங்கிணைந்த உரிமத்தையும் நாம் ஏற்கனவே பெற்றுள்ளோம். தற்போது 17,412 அரசு நிறுவனங்களில் கேஃபோன் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. 9,000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்க கம்பிகள் இணைக்கப்பட்டுள்ளன. 2,105 வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேஃபோன் இணைப்பு வழங்கப்பட்ட அனைத்து அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் ஏற்கனவே இணைய சேவைகள் உள்ளன. இந்நிலையில்தான் கேஃபோன் அதிகாரப்பூர்வ அறிமுக விழா இங்கு நடைபெறுகிறது. கேரளாவில் உள்ள அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விரைவில் பிராட்பேண்ட் இணைப்பு மற்றும் இணைய சேவை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிக இணையத் தடைகள் உள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவில் 700க்கும் மேற்பட்ட இணைய முடக்கங்கள் நடந்துள்ளன. இப்படிப்பட்ட நாட்டில்தான், ஒரு மாநில அரசு, அனைவருக்கும் இணையம் கிடைக்கச் செய்வதன் மூலம் சிறப்பான தலையீடு செய்கிறது. அந்த வகையில், கே ஃபோன் திட்டம் அரசாங்கத்தின் மற்றும் நம் நாட்டின் பிரபலமான மாற்றுக் கொள்கைகளுக்கு மற்றொரு உதாரணமாக மாறி வருகிறது.

உண்மையான கேரளா ஸ்டோரி: கோவிட் சகாப்தத்திற்குப் பிந்தைய காலத்தில் ஒரு புதிய பணி கலாச்சாரம் உருவாகி வருகிறது. வீட்டில் இருந்து வேலை செய்வது, வீட்டிற்கு அருகில் வேலை செய்வது போன்ற வேலை முறைகள் அதிகரித்து வருகின்றன. நமது இளைஞர்கள் பயன்பெற வேண்டுமானால் நாட்டில் எல்லா இடங்களிலும் சிறந்த இணைய சேவைகள் கிடைக்க வேண்டும். அதற்கான தீர்வு தான் கேஃபோன் திட்டம். வாழ சிறந்த இடமாக கருதப்படும் கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பலர், இங்கு வசிக்கவும், இங்கிருந்து பணிபுரியவும் விரும்புகின்றனர். அந்த எண்ணம் உள்ளவர்களை ஈர்த்து, கேஃபோன் மூலம் கேரளாவின் நிதித்துறையில் பெரிய இயக்கத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம், மலைப்பகுதிகளுக்கு இணைப்பை உறுதி செய்வதன் மூலம், யாரும் பின் தங்கிவிடாமல், அனைவரும் இந்த உண்மையான கேரளக் கதையின் ஒரு பகுதியாக இருப்பதை உறுதிசெய்கிறோம். மாறிவரும் உலகத்திற்கு ஏற்ப உலகளாவிய இணைய (internet) அணுகல் அவசியம். எனவே, கேஃபோன் மூலம், கேரளாவை அறிவுப் பொருளாதாரம் மற்றும் புத்தாக்க சமூகமாக மாற்றுவதற்கான உட் கட்டமைப்பை நாம் தயார் செய்து வருகிறோம்.

 Kerala launches state owned KFON to offer high speed internet for all households

அதன் மூலம் ஒட்டுமொத்த கேரளாவையும் குளோபல் இன்ஃபர்மேஷன் எனும் 'உலகளாவிய தகவல்' நெடும் பாதையில் இணைக்கிறோம். இதன்மூலம் உலகளாவிய பரிமாணங்களுடன் கூடிய புதிய கேரள கட்டுமானத்திற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு துறையில் கார்ப்பரேட் சக்திகளுக்கு எதிரான பிரபலமான மாற்று மாடலாக கேஃபோன் திட்டத்தை நாம் பார்க்க வேண்டும். தனியார் துறை கேபிள் நெட்வொர்க்குகள் மற்றும் மொபைல் சேவை வழங்குநர்களின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்கும் உறுதியுடன் கேஃபோன் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். மற்ற சேவை வழங்குநர்களை விட கேஃபோன் சேவைகள் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். கேஃபோன் சேவைகள், நகரம் அல்லது கிராமம் எதுவாக இருந்தாலும், கேரளா முழுவதும் அதிவேகமாகவும் அதே தரத்துடனும் வழங்கலாம்.

கேரளாவின் மாற்று வழிகள்: தனியார் நிறுவனங்கள் இந்தத் துறையில் இருக்கும் போது, மாநில அரசு ஏன் இப்படி ஒரு திட்டத்தைச் செயல்படுத்துகிறது என்று சிலர் கேட்கிறார்கள். ஏகபோக முதலாளித்துவ பாணியில், பொதுத்துறையில் எதுவும் இருக்கக்கூடாது, அனைத்தையும் தனியார் துறையில் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்றால்தான் ஆச்சரியம். கேரளாவின் மாற்று வழி அவர்களுக்கு எளிதில் புரியாது. கிஃப்பி எனப்படும் கேரள உட்கட்ட மைப்பு முதலீட்டு நிதியம் ஒரு பகல் கனவு என்று சொல்லி சிறுமைப்படுத்த முயன்றவர்களும் அவர்கள் தான். கிஃப்பி மூலம் கடந்த 7 ஆண்டுகளில் கேரளா வில் ரூ.80,000 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கே ஃபோன் திட்டத்திற்கு கிஃப்பி மூலம் நிதி திரட்டப் படுகிறது. கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும் வளர்ச்சி நடவடிக்கைகளின் பலன்களை மக்களிடம் கொண்டுசெல்ல கிஃப்பியால் முடிந்தது.

டிஜிட்டல் ஏற்றத்தாழ்வுக்கு எதிராக: கே ஃபோன் திட்டமும் முழு நாடும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், கேரளாவில் டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய மிகவும் உதவியாக இருக்கும். இது கேரளாவால் முன்மொழியப்பட்ட மாற்றுத்திட்டமாகும். அனைவருக்கும் இணையம் என்ற எண்ணத்தில் கேஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இன்னும் சிலர் கேட்டனர், மக்களுக்கு ஏன் இணையம்? எல்லோரிடமும் போன் இல்லையா? முதல் பார்வையில், இது உண்மையா என்று சந்தேகிக்கலாம். நாம் சுற்றி பார்க்கும் பலரிடம் ஸ்மார்ட் போன்கள் இருக்கும். ஆனால் டிஜிட்டல் பாரபட்சத்தின் தீவிரத்தை புரிந்து கொள்ள, சில புள்ளிவிவரங்களை நாம் ஆழமாக ஆராய வேண்டும். நம் நாட்டில் 50 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களே இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். 33 சதவிகித பெண்களுக்கு மட்டுமே இணைய வசதி உள்ளது. கிராமப்புறங்களில் இது 25 சதவிகிதம் மட்டுமே. பழங்குடியின மக்களுக்கு மற்ற பகுதியினரைவிட 30 சதவிகிதம் குறைவாகவே இணைய வசதிகள் உள்ளன. டிஜிட்டல் ஏற்றத்தாழ்வு மிகவும் ஆழமாக உள்ள ஒரு நாட்டில், அதை அகற்ற இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பழங்குடியினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களை சமூகத்தின் ஒரு அங்கமாகப் பார்க்கும் எவருக்கும் இது குறித்து கேள்வி எழாது.

பள்ளிக் கல்வித் துறையில் டிஜிட்டல் பிரிவினையை கூட்டு நடவடிக்கை மூலம் முறியடித்துள்ளோம். அப்போதும் பல கேள்விகள் எழுந்தன. குழந்தைகளுக்கு இப்படி வசதிகள் தேவையா என்று கேட்டவர்களும் உண்டு. நாம் அன்று அதன்படி சென்றிருந்தால், இன்று அனைத்து குழந்தைகளுக்கும் டிஜிட்டல் கல்வியை சாத்தியமாக்கிய இந்தியாவின் ஒரே மாநிலமாக கேரளா ஆகியிருக்காது. அதுமட்டுமின்றி, கோவிட் கட்டத்தில் நாட்டின் பல பகுதிகளில் ஒரு பகுதி குழந்தைகள் கல்வியை கைவிட்டுள்ளனர். அது இங்கு நடக்கவில்லை. எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஆட்சிப் பண்பாடு இல்லாதவர்களால் இப்படி யொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியாது.

சாமானியருக்கு மேம்பட்ட வசதிகள்: விரிவான வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அனைவரையும் உள்ளடக்கிய எந்தத் திட்டத்தையும் எதிர்ப்பவர்களும் உண்டு. சாதாரண மனிதர்க்கு ஏன் இணையம், சாமானியனுக்கு ஏன் மேம்பட்ட போக்குவரத்து வசதி என்ற கேள்விகள் எழுகின்றன. முழு உலகமும் மாறிக்கொண்டிருப்பதை அவர்கள் பார்க்க வில்லையா? குடிசைத் தொழில்கள் தங்கள் பொருட்களை ஆன்லைனில் விற்கும் இக்காலத்திலும் நாகரீக மற்ற எண்ணங்களுடன் நடக்கும் இவர்கள் நாட்டையே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இவர்களது பார்வையில், வளர்ச்சி என்பது ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே. ஆனால் கேரளாவில் வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்கானது. இணையம் மக்களின் உரிமை என்று அறிவித்து, இணைய சேவையை அனைவருக்கும் கிடைக்கச் செய்கிறது இடது ஜனநாயக முன்னணி அரசு. இந்த முன்னேற்றம் மக்களின் அன்றாட வாழ்க்கை தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க உதவும் என்பது உறுதி. அந்தக் கண்ணோட்டத்தில்தான் பொதுச் சேவைகள் அனைத்தும் ஆன்லைனில் கிடைக்கின்றன. ஏற்கனவே 900க்கும் மேற்பட்ட சேவைகள் மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் ஆன்லைனில் மக்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதே சமயம், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வீட்டு வாசலில் அரசு சேவைகள் கொண்டு சேர்க்கப்படுகின்றன.

டிஜிட்டல் அறிவியல் பூங்கா: பொது இடங்களில் இலவச வைஃபை, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பிராட்பேண்ட் இணைப்பு, அதிவேக இணையம் மற்றும் ஆன்லைன் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதன் மூலம், கேரளா அறிவுப் பொருளாதாரம் மற்றும் புதுமை சமூகமாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் கேரளாவிற்கு மிகப்பெரிய சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒட்டு மொத்த ஐடி துறை பெரிய மாற்றங்களைக் கண்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையின் முக்கியத்து வத்தை வெகுகாலத்திற்கு முன்பே உணர்ந்து, அதில் காலடி எடுத்து வைத்த முதல் மாநிலம் கேரளா. 33 ஆண்டுகளுக்கு முன்பு 1990இல் திருவனந்தபுரத்தில் அன்றைய இ.கே.நாயனார் அரசால் நாட்டின் முதல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்கப் பட்டது. இப்போது நாட்டின் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளாவில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் டிஜிட்டல் அறிவியல் பூங்காவும் கேரளாவில் துவங்குகிறது.

பொதுத்துறை பாதுகாப்பு: இவ்வாறு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு விரிவான தலையீடுகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம், அடுத்த 25 ஆண்டுகளில், நடுத்தர வருவாய் உள்ள வளர்ந்த நாடுகளின் நிலைக்கு கேரளா உயர்த்தப்படுகிறது. அதற்காக விவசாய நவீனமய மாக்கல், தொழில்துறை மறுசீரமைப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் கேஃபோன் திட்டம் ஒரு தூண்டுதலாக இருக்கிறது. கேஃபோன் ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். பொதுத்துறை நிறுவனங்களை அழித்து விற்கும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இதுவே கேரளாவின் மாற்றாகும். இது பெல் (BHEL) - EML மற்றும் HNL போன்ற நிறுவனங்களை கேரள அரசே எடுத்துக் கொண்டு லாபத்தில் இயங்கச் செய்த மாற்று மாடலின் தொடர்ச்சியாகும்.
(மலையாள உரை தமிழில்: சி.முருகேசன்- நன்றி தீக்கதிர்)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+