Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேரளா ரெண்டுபட்டா.. பாஜகவுக்கு கொண்டாட்டம்! காங்க், கம்யூனிஸ்டுக்கு அபாய மணி! அலர்ட் ஆகலைனா சிரமம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) கூட்டணி எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு மாறாக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) பல இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

அதே நேரத்தில், யாரும் எதிர்பாராத வகையில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது பாஜகவுக்கு படு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கேரளாவில், காங்கிரஸும், மார்க்ஸிஸ்டும் கைகோர்க்க வேண்டிய நேரமிது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கேரளாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

Kerala Local Body Election Shock

கேரளா உள்ளாட்சி தேர்தல்

இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான யுடிஎஃப் மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ ஆகிய மூன்று அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. மாநிலம் முழுவதும் 941 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 17,337 வார்டுகள், 87 நகராட்சிகளில் 3,240 வார்டுகள் மற்றும் ஆறு மாநகராட்சிகளில் 421 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

எல்டிஎஃப் தோல்வி

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான நிலையில், ஆளும் இடதுசாரி கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. பல பகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளதுடன், சில இடங்களில் பாஜக எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றுள்ளது. இது இடதுசாரி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசியலில் இதுவரை கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு அணிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்துள்ளன. அந்த வகையில், 2016 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் இடதுசாரி கூட்டணி தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தது.

திருவனந்தபுரம் மாநகராட்சி

முதல்வர் பினராயி விஜயன் தற்போது இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வரும் நிலையில், அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வந்தன. ஆனால், இந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அந்த திட்டங்களுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த முடிவுகள் கேரளாவில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பை வெளிப்படுத்தியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

கேரளா பாஜக வளர்ச்சி

ஒரு காலத்தில் கேரளாவில் பாஜகவுக்கு அரசியல் ரீதியாக இடமில்லை என கூறப்பட்ட நிலை இருந்தது. ஆனால் கடந்த சில தேர்தல்களில் அந்த நிலை மெதுவாக மாறி வருகிறது. 2024 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி மட்டும் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் தங்களுக்கும் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை பாஜக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அந்த நம்பிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக அக்கட்சி தரப்பு கருதுகிறது.

கேரளா அரசியல் மாற்றம்

இந்த தேர்தலில் பாலக்காடு, திரிபுனித்துரா உள்ளிட்ட சில நகராட்சிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக வெற்றி பெற்றது கேரள மாநில அரசியலில் திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது. மொத்தம் 101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெரும்பான்மைக்கு தேவையான 51 இடங்களில் பாஜக 50 இடங்களை வென்றுள்ளது. இரண்டு சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவுடன், பாஜக முதன்முறையாக கேரளாவில் ஒரு மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளா உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

மொத்தமாக நகராட்சிகளில் யுடிஎஃப் 54 இடங்களிலும், எல்டிஎஃப் 28 இடங்களிலும், என்டிஏ 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. கிராம பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் 504 இடங்களிலும், எல்டிஎஃப் 341 இடங்களிலும், என்டிஏ 26 இடங்களிலும் வென்றுள்ளன. மாவட்ட பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் மற்றும் எல்டிஎஃப் தலா 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. வட்ட அளவிலான உள்ளாட்சி அமைப்புகளில் யுடிஎஃப் 79 இடங்களிலும், எல்டிஎஃப் 63 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இடதுசாரி பின்னடைவு

இது ஒரு புறம் இருக்க கேரளா உள்ளாட்சித் தேர்தலில் ஒரு மாநகராட்சி, இரண்டு நகராட்சி மற்றும் 26 பஞ்சாயத்துகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு விடப்பட்ட வெளிப்படையான எச்சரிக்கை என எச்சரிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். வட மாநிலங்களில் பாஜக மிக வலுவாக இருந்தாலும் தென் மாநிலங்களை குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்தில் பாஜகவின் நிலை மிக பரிதாபகரமாக இருந்தது.

2026 கேரளா தேர்தல்

ஆனால் சமீபத்தில் ஒன்று இரண்டு எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பாஜக மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி இடம் பெற்றிருக்கும் நிலையில் கேரளாவில் இரு துருவங்களாக அரசியல் நடத்தி வருகின்றனர். இதனால் பாஜக மெல்ல மெல்ல அங்கு காலூன்றி வருகிறது. தற்போதைய வெற்றியின் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் பாஜகவுக்கு குறைந்தது ஐந்து முதல் ஏழு சட்டமன்ற தொகுதிகள் வரை கிடைக்கலாம் என சொல்லப்படுகிறது.

காங்க். - கம்யூனிஸ்ட்

ஒன்றிரண்டு எம்எல்ஏக்கள் கிடைத்தால் கூட பாஜகவுக்கு அது மிகப்பெரிய வெற்றி தான். அந்த வகையில் தேசிய அளவில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய காங்கிரஸும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்கின்றனர் இல்லையென்றால் பாஜக கேரளாவில் வலுவாக காலூன்றி விடும் என கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+