உப்புமா வேணாம்..பிரியாணி, பொரிச்ச கோழி தான் வேணும்! மழலை மொழியில் சொன்ன ஷங்கு..ஓகே சொன்ன அமைச்சர்
திருவனந்தபுரம்: அங்கன்வாடியில் தினமும் உப்புமா தான் தரப்படுவதாகவும், இனிமேல் பிர்னானி ( பிரியாணி ) பொரிச்ச கோழி தான் வழங்க வேண்டும் என குழந்தை ஒன்று பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், குழந்தையின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என பதிலளித்துள்ளார் கேரளா பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.
தமிழகத்தை போலவே இந்தியா முழுவதும் மத்திய அரசு சார்பில் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதி உதவியுடன் இந்த மையங்கள் செயல்பட்டு வருகிறது.

ஒன்று முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. அவர்களுக்கு அரசு சார்பில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள், சீருடைகள், கல்வி கற்கும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியானது.
அதில் தொப்பி அணிந்து பேசிய ஷங்கு என்ற குழந்தை தங்கள் அங்கன்வாடியில் தினமும் உப்புமா தான் வழங்குகிறார்கள். உப்மாவுக்கு பதிலாக பிர்னாணி ( பிரியாணி ) மற்றும் பொரிச்ச கோழி வேண்டும் என தனது தாயிடம் கேட்டிருந்தார். அவ்வாறு பேசிக் கொண்டே குழந்தையை சமாளித்து உணவு ஊட்டி இருந்தார். அந்த தாய் அந்த வீடியோவை ஷங்குவின் தாயார் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் அதனை ட்ரெண்ட் ஆக்கினர்.
இந்த நிலையில் இந்த வீடியோ கேரள மாநில சுகாதார மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கவனத்திற்கு சென்றது. இதனையடுத்து அந்த வீடியோவுக்கு பதில் அளிக்கும் வகையில் பேஸ்புக் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர் அங்கன்வாடியின் மெனு திருத்தப்படும் என உறுதி அளித்திருக்கிறார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்,' ஷங்குவின் பரிந்துரையை கணக்கில் எடுத்துக் கொண்டு மெனு மதிப்பாய்வு செய்யப்படும். அவர் பிரியாணியும் பொரிச்ச கோழியும் வழங்க வேண்டும் என கேட்டு இருக்கிறார். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவை உறுதி செய்வதற்காக அங்கன்வாடிகள் மூலம் பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. கேரளா அரசாங்கத்திற்கு அங்கன்வாடிகள் முட்டை மற்றும் பால் வழங்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையுடன் ஒருங்கிணைந்து உள்ளாட்சி அமைப்புகள் அங்கன்வாடிகளில் பல்வேறு வகையான உணவுகளை வழங்குகின்றன. அந்த வகையில் ஷங்குவின் கோரிக்கையும் பரிசீலிக்கப்படும், அங்கன்வாடி மெனு மாற்றப்படும்" எனக் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications