சபரிமலை தீர்ப்பு.. கேரள அரசியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்.. நெருக்கடியில் பினராயி!
Recommended Video
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவில் நாளை மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட உள்ளது. அதற்குள்ளாக பெண்களை அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கேரள அரசு உள்ளது.
ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தனது முந்தைய தீர்ப்பை மறு ஆய்வு செய்து குறித்து 7 நீதிபதிகள் கொண்டஅமர்வுக்கு மாற்றி உள்ளது. எனவே கடந்த ஆண்டு செப்டம்பரில் பிறப்பித்த உத்தரவின் படி பெண்கள் சபரிமலை செல்லலாம் என்ற நிலை உள்ளது.
எனவே உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பான சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவை இந்த ஆண்டு அமல்படுத்துவதா வேண்டாமா என்பது குறித்து நாளைக்குள் முடிவெடுத்தே ஆக வேண்டிய நெருக்கடி முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது சாரி அரசுக்கு ஏற்பட்டுள்ளது

பாஜக எச்சரிக்கை
ஏனெனில் கடந்த ஆண்டு சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்பை அமல்படுத்தப்போவதாக அறிவித்து சில பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடந்த ஆண்டு போராட்டத்தில் குதித்தன. இதனால் சபரிமலையில் பதற்றம் நீடித்தது.

நிதானம் தேவை
இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில பாஜக தலைவர் கும்மனம் ராஜசேகரன், "கேரள அரசு நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்கள் சன்னதிக்குள் நுழைவதற்கு வசதியாக வழக்கில் உள்ள தெளிவின்மையைப் பயன்படுத்தக்கூடாது" என்றார்.

மறு ஆய்வு மனு
உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனுதாரரான சபரிமலை தலைமை பூசாரி காந்தாரு ராஜீவாரு கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். இது ஐயப்ப பக்தர்களுக்கு நம்பிக்கை மற்றும் மன உறுதியை தரும் தீர்ப்பு" என்றார்.

இடதுசாரிகள் அழைப்பு
இதற்கிடையில், சபரிமலை விவகாரத்தில் இடதுசாரி தலைவர்கள் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளனர், மேலும் அவர்கள் தீர்ப்பில் தெளிவுக்காக காத்திருப்பதாகக் கூறியுள்ளனர். பெயர் குறிப்பிடாத சில தலைவர்கள், தீர்ப்பைப் பற்றி தெளிவு கோரி கேரள அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்றனர். அதேநேரம் பெண்களை சன்னதிக்குள் நுழைய அனுமதிக்க முயன்றால் அந்த முடிவு புதைக்குழி போன்றது என்றனர்.

பதற்றத்தை தூண்ட வேண்டாம்
கோயில்கள் விவகாரத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரனிடம், சபரிமலை விஷயத்தில் அரசு என்ன செய்யப்போகிறது என்று செய்தியாளர்கள் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர் "இவை இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்விகள் அல்ல. தீர்ப்பிலிருந்து அரசியல் ஆதாயம் பெறவோ அல்லது பதற்றத்தைத் தூண்டும் கருத்துக்களைத் தெரிவிக்கவோ வேண்டாம் என எதிர்க்கட்சி உட்பட அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் கூறினார். கருத்துகளைத் தெரிவிக்கும் முன் தீர்ப்பைப் படிப்பேன் என்றும் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறினார்.

திருவிதாங்கூர்
சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்கவுள்ள வாசு கூறுகையில், "முந்தைய தீர்ப்பில் மாறுபட்டுள்ளது என்றாலும், இப்போது புதிய சூழலை உருவாக்கி உள்ளது.. பழைய தீர்ப்பு இப்போது ஒரு புதிய பெஞ்ச் மூலம் ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்கு முன், நாங்கள் எங்கள் வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்டு தீர்ப்பைப் படித்து உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவோம், "என்று அவர் கூறினார்.

மாறிய நிலைப்பாடு
இதனிடையே சபரிமலையில் பெண்கள் நுழையும் விவகாரத்தில் எப்போது ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருபவர் பினராயி விஜயன். அவருடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதேரேம் முந்தைய ஆண்டைப்போல் சபரிமலை வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில்லை என்று கேரள சட்ட அமைச்சர் அறிவித்து இருப்பதால், இடது சாரி தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியிருப்பது தெரியவந்துள்ளது.

கேரள அரசு
சட்ட நிபுணர்களுடன் ஆலோசனைக்கு பின்னர் பெண்களை அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்போவதாக பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதுவரை காத்திருந்தால் சபரிமலையில் பெண்கள் செல்வது சரியாக இருக்குமா என்பது தெரியவரும். கடந்த ஆண்டைப்போல் சபரிமலை விஷயம் பூதாகரமாக இருக்காமல் பார்க்க வேண்டும் என்பதில் கேரள அரசு உறுதியாக உள்ளது.












Click it and Unblock the Notifications