கேரளாவிலும் ஒருவருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி-இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பு
திருவனந்தபுரம்: கர்நாடகா, ஆந்திராவைத் தொடர்ந்து கேரளாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து கேரளாவின் எர்ணாகுளம் வந்த நபருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு ஓமிக்ரான் என்கிற புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்தியாவிலும் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, சண்டிகரில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவிலும் பாதிப்பு
இந்நிலையில் கேரளாவிலும் ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியபப்ட்டுள்ளது. இது தொடர்பாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது: இங்கிலாந்தில் இருந்து அபுதாபி வழியாக கொச்சிக்கு எர்ணாகுளத்தைச் சேர்ந்த நபர் கடந்த 6-ந் தேதி வருகை தந்தார். 2 நாட்கள் கழித்து அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி, தாயார் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

அச்சம் வேண்டாம்
தற்போது அந்த நபருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அவருடன் விமானத்தில் பயணித்த 149 பேருக்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எதற்கும் பீதி அடையத் தேவை இல்லை. இவ்வாறு வீணா ஜார்ஜ் கூறினார்.

இந்தியாவில் 38 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு
கேரளாவில் இன்று மொத்தம் 57,121 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன். இதில் 3,777 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் தற்போதைய நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 38,361. கேரளாவில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இப்பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video

எப்படி ஓமிக்ரான் வந்தது?
இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு விவரம்: மகாராஷ்டிரா- 18; ராஜஸ்தான் 9; கர்நாடகா-6; ஆந்திரா-1; டெல்லி-2; சண்டிகர்-1; கேரளா-1. இத்தாலியில் இருந்து சண்டிகர் வந்த 20 வயது நபருக்கும் அயர்லாந்தில் இருந்து மும்பை வந்துவிட்டு விசாகப்பட்டினம் சென்ற வெளிநாட்டு பயணிக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த 40 வயது நபருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்ப்ட்டது. இந்தியாவில் பெங்களூருவில்தான் முதல் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.












Click it and Unblock the Notifications