“லா இலாஹ இல்லல்லாஹ்”.. ஏழைக்காக ரோட்டில் பாடிய மாணவி ஆதிரா! நெகிழ வைக்கும் “தி ரியல் கேரளா ஸ்டோரி”
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் 10 வகுப்பு மாணவி ஒருவர் ஏழை பெண்ணுக்காக சாலையில் நின்றுகொண்டு மனிதாபிமானத்துடன் பாடிய பாடல் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்துள்ளது நிலம்பூர் போத்துகல் பகுதி. அங்குள்ள போத்துக்கல் கத்தோலிக் மேல்நிலைப்பள்ளியில் ஆதிரா என்ற மாணவி 10 ஆம் வகுப்பு படித்து வந்து இருக்கிறார். இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்க இருப்பதால் தனது தந்தையுடன் கடை தெருவுக்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க சென்று இருக்கிறார்.

அங்கு ஒரு ஏழை குடும்பம் நின்றுகொண்டு இருந்தது. ஒரு பெண் தனது கை குழந்தை மற்றும் பார்வையற்ற கணவருடன் நின்று பாட்டுப்பாடி யாசகம் கேட்டுக்கொண்டு இருந்து உள்ளார். பாடல்களுக்கு மத்தியில் தன்னுடைய குடும்ப கஷ்டத்தை சொல்லி தங்களுக்கு உதவுமாறும் அவர் மைக்கில் கேட்டு இருக்கிறார்.
இதனை நீண்ட நேரமாக மாணவி ஆதிரா பார்த்துக்கொண்டு இருந்து உள்ளார். இந்த நிலையில் பாட்டுப் பாடிக்கொண்டு இருந்த அந்த ஏழை பெண்ணுக்கு திடீரென பாடுவதில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. அப்போது மாணவி ஆதிரா அந்த பெண்ணுக்கு உதவி செய்ய முயன்றார். அந்த ஏழை பெண்ணின் இயலாமையை தனது தந்தையிடம் சொன்ன மாணவி அவருக்கு பதிலாக சிறுது நேரம் தான் பாடுவதாக கூறி அனுமதி கேட்டு இருக்கிறார்.
உடனே ஆதிராவின் தந்தையும் அனுமதி வழங்கி உள்ளார். இதனை அடுத்து அந்த பெண்ணை நோக்கி சென்ற மாணவி, அவருக்கு தேநீர் வாங்கிக்கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி இருக்கிறார். உங்களுக்கு பதிலாக சிறிது நேரம் நான் பாடல் பாடட்டுட்டுமா என்று அவரிடம் அனுமதி கேட்டு மைக்கை எடுத்த அவர், மலையாளத்தில் புகழ்பெற்ற பழமையான "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற இஸ்லாமிய பாடலை பாடி உள்ளார்.
அந்த கடை வீதியில் ஏழை பெண் பாடுவதையும், அவரது குரலையும் கேட்டு பழகிப்போன மக்கள் திடீரென ஆதிரா பாடுவதை கேட்டு மெய் மறந்தனர். அந்த அளவுக்கு அனைவர் உள்ளத்தை உருக வைக்கும் அளவுக்கு இருந்தது ஆதிராவின் பாடல். சிறுமி ஆதிரா பாடுவதை வீடியோ பதிவு செய்த ஒருவர் சமூக வலைதளங்களில் வெளியிட தற்போது அது டிரெண்டாகி உள்ளது.
மாணவி ஆதிராவின் செயலை கேரள மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட மண் சரிவில் ஆதிரா தன்னுடைய வீட்டை இழந்தார். இதனால் அதே ஊரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இசைக் கல்வியை கற்றுவந்த ஆதிரா குடும்பத்தில் நிலவும் பொருளாதார சிக்கல் காரணமாக அதையும் நிறுத்தினார்.
அவர் கற்று கைவிட்ட இசை தற்போது அவரை புகழின் உச்சத்துக்கு கொண்டு சேர்த்து இருக்கிறது. இந்த தகவல் அறிந்த ஊர் முக்கியஸ்தர்கள் ஆதிராவை நேரில் சந்துத்து பாராட்டி இருக்கிறார்கள். அத்துடன் அவருக்கு புதிய வீடு கட்டித்தரும் பொறுப்பை அவர் படித்த பள்ளி நிர்வாகம் ஏற்று இருக்கிறது.












Click it and Unblock the Notifications