இன்ஸ்டாவில் பழகி.. 14 வயது மாணவிக்கு கஞ்சா கொடுத்து.. 7 மாணவர்கள்.. ஒரு வருடமாக நடந்த கொடூரம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 14 வயது மாணவிக்கு கஞ்சா உட்பட பல்வேறு போதைப்பொருட்களை கொடுத்து ஏழு மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமூக வலைதளங்களை பதின்ம வயது சிறுவர் சிறுமிகள் பயன்படுத்துவதை தடுக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. முன்பின் தெரியாதவர்கள் சிறுமிகளை குறிவைத்து நட்பு கோரிக்கை வைத்து அவர்களை தங்கள் வலையில் விழ வைக்க கேவலமான செயல்களில் ஈடுபடுகிறார்கள்,
அப்படி காதல் வலையில் ஏமாறும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, தங்கள் எதிர்காலத்தை தொலைக்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு அது வலியை தருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 14 வயது மாணவியை ஏழு மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்திருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இன்ஸ்டாகிராம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கல்பகசேரி பகுதியை சேர்ந்த 14 வயது மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக ஏழு மாணவர்கள் நட்பு பாராட்டி வந்துள்ளார்கள். அவர்கள் மாணவிக்கு அடிக்கடி போதை வஸ்துக்களை கொடுத்து வந்துள்ளார்கள். மாணவியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சில நாட்களாக மகளின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

போலீசில் புகார்
தனது மகளிடம் அவரது தாயார் கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்திருக்கிறார். துருவி துருகி கேட்ட பின்னர் தான் மகள் கஞ்சா உள்ளிட்ட போதைக்கு அடிமையான தகவல் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அந்த மாணவியின் தாய் உள்பட உறவினர்கள் கல்பகசேரி போலீஸ் ஸ்டேசனில் தங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட நிலை குறித்து புகார் அளித்தனர்.

கஞ்சா கொடுத்தனர்
இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது மேலும் ஒரு அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வந்தது. அந்த மாணவியை இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவர்கள் 7 பேரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் கொடுத்து போதைக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

7 பேரும் சேர்ந்து பலாத்காரம்
இதை தொடர்ந்து மாணவியிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவியிடம் மேலும் விசாரணை நடத்தியதில் ஏழுபேர் போதைப்பொருட்களை வழங்கி ஒரு வருடக் காலமாக பாலியல் வன்கொடுமை செய்ததை அவர்கள் விசாரணையில் உறுதி செய்தனர்.

கேரளாவில் அதிர்ச்சி
இதை தொடர்ந்து காவல்துறையினர் ஏழு பேரில் 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். மலப்புரம் பகுதியை சேர்ந்த இருவரை, எடலணாகுளம் மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் கைது செய்தனர். மீதி உள்ள ஐந்துபேரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications